ஆதவ் கிருஷ்ணா, கல்லூரியில் படிக்கும் புத்திசாலி மாணவன். அவரை கோடீஸ்வர வீட்டு பெண் சிம்ரன் அத்வானி காதலிக்கிறார். சிம்ரன் அத்வானி, தாயை தேடி வாரணாசி செல்கிறார். அப்போது விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த அவரை கடத்திவிட்டதாக, வாரணாசி போலீசார் ஆதவ் கிருஷ்ணாவை சிறையில் அடைத்து சித்ரவதை செய்கின்றனர். பிறகு நடப்பது எதிர்பாராதது.
சீனியர் தயாரிப்பு நிர்வாகி ஆர்.பி.பாலகோபியின் மகன் ஆதவ் கிருஷ்ணா ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். குருவி தலையில் பனங்காய் வைத்திருக்கிறார்கள். அதை கஷ்டப்பட்டு சுமந்துள்ளார். அறிமுக படமே அவருக்கு சிறப்பாக அமைந்துள்ளது. ஜோடியாக வரும் சிம்ரன் அத்வானி அழகாக இருக்கிறார், இயல்பாக நடித்துள்ளார். பாசமுள்ள பெற்றோராக படவா கோபி, வினோதினி வைத்தியநாதன் மற்றும் ஜாவா சுந்தரேசன், ரோஹித், தனஞ்செயன், முத்து புவன் ஆகியோர் யதார்த்தமாக நடித்துள்ளனர்.
என்.எஸ்.சதீஷ் குமாரின் ஒளிப்பதிவு, வாரணாசியை நேரில் பார்க்கும் உணர்வை ஏற்படுத்தியுள்ளது. அஸ்வமித்ரா இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பலம் சேர்த்துள்ளன. என்.பி.ஸ்ரீகாந்த் எடிட்டிங் இன்னும் ஷார்ப்பாக இருந்திருக்கலாம். அசோக் அமிர்தராஜ் கதை, வசனம் எழுதியுள்ளார். ‘உண்மையான காதல் எந்த நிலையிலும் தோற்காது’ என்று இயக்குனர் ஆர்.மகாலட்சுமி முருகன் பாடம் நடத்தியுள்ளார். படத்தின் நீளத்தை குறைத்திருக்க வேண்டும்.
