சிவகார்த்திகேயன் கொடுத்த நம்பிக்கைதான் ‘வாழ்’ - நெகிழும் ’அருவி’ அருண் பிரபு புருஷோத்தம்

‘அருவி’ பட வெற்றி யாவரும் அறிந்ததே. அந்த வெற்றியின் தொடர்ச்சியாக நான்கு வருடங்கள் கழித்து ‘வாழ்’ படத்துடன் வந்திருக்கிறார் இயக்குநர் அருண் பிரபு புருஷோத்தமன். ஜூலை 16ம் தேதி 'Sony Liv' ஓடிடி தளத்தில் வெளியாக உள்ள இப்படம் குறித்து நம்மிடம் பேசியபோது.

எங்கே எப்படி ஆரம்பித்தது ‘வாழ்’?

’இந்தக் கதையை நான் 2010லேயே எழுதிட்டேன். ஆனால் உங்களை வந்தடைய 10 வருடங்கள் ஆகிடுச்சு. நான் முதலில் எழுதிய கதை ‘ வாழ்’ படத்தின் கதைதான். ஆனால் சரியான காலம், சரியான நேரம் வரணும்னு காத்திருந்தேன்’

வாழ் என்ன மெசேஜ் கொடுக்க போகுது ?

’வாழ்’ அதுதான் மெசேஜ் ஒவ்வொருத்தரும் தன்னுடைய வாழ்க்கையை இப்படி வாழனும் அப்படி வாழணும்னு ஒவ்வொரு கட்டத்திலும் நிறைய மெனக்கெடுறாங்க. கிடைச்ச ஒரு வாழ்க்கைய வாழ்றதுக்கு ஏன் இவ்வளவு பிரச்னைகள். ஆனால் ‘அருவி’ மாதிரி ரொம்ப ஸ்டிராங் கதையா இல்லாம லைட் வெயிட்டா இந்த படத்தில் சொல்லி இருக்கேன். இந்தப் படம் பார்க்கும் போது ஒவ்வொருத்தரும் தன்னைத்தானே படத்தில இருக்கிற ஏதோ ஒரு கேரக்டர் கூட பொருத்தி பார்க்கிற மாதிரி இருக்கும் .

‘அருவி’ அதிதி பாலன் மாதிரி ‘வாழ்’ டி.ஜே பானு மனசிலே நிற்பாங்களா?

‘ இந்தப் படத்திலே டி.ஜே.பானு மட்டும் இல்ல ஹீரோ பிரதீப் ஆண்டனி, திவ்யா தவான் இப்படி ஒவ்வொருத்தரும் மனசிலே நிற்பாங்க. ஹீரோவாக ‘அருவி’ பிரதீப் ஆண்டனியே நடிசிருக்கார். டி.ஜே.பானு மும்பை பொண்ணு. ஆடிஷன் செய்துதான் எடுத்தோம். அடிஷன்ல டயலாக் இல்லாத ஒரு கேரக்டர் கொடுத்து நடிச்சுக் காட்ட சொன்னோம். அற்புதமா நடிச்சுக் காட்டினாங்க. ஆனால் அப்பறம்தான் எங்களுக்குத் தெரியும் அவங்களுக்கு தமிழ் ஒரு வார்த்தைக் கூட தெரியாதுன்னு. ஆனால் படத்திலே ஒரு காட்சியிலே கூட அவங்க தமிழ் தெரியாத பொண்ணுன்னு சொல்லவே முடியாத அளவுக்கு சிறப்பா நடிச்சிருக்காங்க.

சிவகார்த்தியன் மற்றும் அவருடைய புரடெக்‌ஷன் கம்பெனி எப்படி இணைந்தார்கள்?

’கடந்த 2011ம் வருடமே சிவகார்த்திகேயன் அண்ணா கிட்ட கதை சொல்லியிருந்தேன். 'வாழ்' படத்தில் நிறைய இடங்கள், புதுமுகங்கள் இப்படி எந்தத் தயாரிப்பாளரா இருந்தாலும் இந்தக் கதைய தயாரிக்க யோசிப்பாங்க. இதில் புதிதாக முயற்சி செய்திருக்கிற விஷயங்கள் வேறு அதிகம். சிவகார்த்திகேயன் உள்ளே வந்தபோதே அந்த நம்பிக்கை வந்துவிட்டது. 'நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, அதை செய்திடுங்க. நான் கடைசியா பார்த்துக்கறேன். நீங்கள் எதுவும் என்கிட்ட சொல்ல வேண்டாம்’ன்னு சொல்லிட்டார் .நானே ஒரு கட்டத்தில் தயங்கிபோது கூட 'சூப்பர்' என சொல்லி நம்பிக்கைக் கொடுத்தார் சிவா அண்ணா.

எப்பவோ படம் முடிச்சிட்டீங்களே?

‘ ஆமா போன வருஷம் பிப்ரவரியே வெளியாகியிருக்கணும். நிறைய சர்வதேச விழாக்களுக்கு கூட அனுப்பணும்னு திட்டமிட்டிருந்தோம். ஆனால் கொரோனா பிரச்னை ஆரம்பிச்சு மொத்த உலகமும் முடங்கியிருச்சு. தொடர்ந்து பல கட்டங்கள்ல படம் வெளியாக தாமதம் அதான் இப்போ ஓடிடி. என்னைப் பொருத்தவரை மேடை எதுவா இருந்தாலும் என்னுடைய பெஸ்ட் கொடுக்கணும்னு நினைச்சுதான் கொடுத்திருக்கேன். நீங்கதான் படம் பார்த்துட்டு சொல்லணும்’.

உங்க அடுத்தடுத்தப் படங்கள் பத்தி சொல்லுங்களேன்?

’வாழ்’ பட ஒன்லைன் அதுதான். நாளைக்குக் கதைய நாளைக்குப் பார்க்கலாம். இன்னைக்குக் கிடச்ச வாழ்க்கைய வாழ்வோம். நிச்சயம் அடுத்த படம் ஆரம்பிக்கும் போது உங்களுக்கு சொல்லிட்டுதான் ஆரம்பிப்பேன்.

Related Stories: