மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, வாசனை சீரக சம்பா, பாரம்பரிய நெல் சாகுபடி அறிய விவசாயிகள் சுற்றுலா-அத்திவெட்டி கிராமத்தில் விளக்கம்

பேராவூரணி : பேராவூரணி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் செயல்படும் அட்மா திட்டத்தில் பேராவூரணி வட்டாரத்தை சார்ந்த விவசாயிகள் பாரம்பரிய நெல் சாகுபடி குறித்து அறிந்து கொள்வதற்காக அத்திவெட்டி கிராமத்திற்கு சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.அத்திவெட்டி கிராமத்தில் இயற்கை விவசாயி ராஜா கிருஷ்ணன் பாரம்பரிய நெல் சாகுபடி செய்து வருகிறார்.அவரது வயலுக்கு அழைத்துச்செல்லப்பட்ட விவசாயிகளின் சந்தேகங்களுக்கு இயற்கை விவசாயி ராஜா கிருஷ்ணன் கூறியது, நீண்டகால வயதுடைய நெல் ரகங்களை சாகுபடி செய்யும் பொழுது நடவு செய்த 30 நாட்களில் நெல் பயிர் நுனியினை வெட்டி விடுவதால், நெல் பயிர் பக்க கிளைகள் அதிகரிக்கிறது. இதனால் மகசூல் 25 சதம் அதிகரிக்கும்.மேலும் நுனியினை வெட்டுவதால் தீமை செய்யும் பூச்சிகளின் முட்டை அழிக்கப்படுகிறது.பொதுவாக நீண்ட கால நெல் ரகங்கள் பயிரின் உயரம் அதிகரித்து பக்கக் கிளைகள் குறைவாகவும் காணப்படும். இந்த தொழில்நுட்பத்தினை பயன்படுத்துவதால் பயிரின் உயரம் குறைவாகவும் பக்க கிளைகள் எண்ணிக்கை அதிகமாகவும் இருக்கும், தமது வயலில் மாப்பிள்ளை சம்பா ,கருப்பு கவுனி ,வாசனை சீரக சம்பா ,சொர்ண மயூரி, ஆத்தூர் கிச்சடி சம்பா ,கருடன் சம்பா ,தங்க சம்பா ,சீரக சம்பா மற்றும் தூயமல்லி ஆகிய பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து வருவதாகவும், மருத்துவ குணமிக்க பாரம்பரிய நெல் ரகங்களை அழியாமல் பாதுகாத்து, விதை நெல் விற்பதன் மூலமாகவும், அரிசியாக விற்பதாலும் தனது வருமானத்தை அதிகப்படுத்தி கொண்டதாகவும், பாரம்பரிய நெல் ரகங்களை ஒரு குழுவாக சேர்ந்து இயற்கையான முறையில் சாகுபடி செய்வதால் எளிமையான முறையில் சந்தைப்படுத்த முடியும் எனவும் விவசாயிகளிடம் கூறினார்.சுற்றுலாவில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் செல்வி மற்றும் அட்மா திட்டத்தினர் கலந்து கொண்டனர்….

The post மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, வாசனை சீரக சம்பா, பாரம்பரிய நெல் சாகுபடி அறிய விவசாயிகள் சுற்றுலா-அத்திவெட்டி கிராமத்தில் விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: