சென்னை: தமிழில் ‘வல்லமை தாராயோ’, ‘கொல கொலயா முந்திரிக்கா’, ‘கே.டி’ உள்பட பல படங்களை இயக்கியவர் மதுமிதா. இவர் முதல்முறையாக பாலிவுட்டில் தடம் பதித்துள்ளார். இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காளிதார் லாபத்தா’ இந்தி படம் ஓடிடியில் நேற்று முன்தினம் வெளியானது. இது குறித்து மதுமிதா கூறியது: தமிழில் நான் இயக்கிய ‘கே.டி’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதை இந்தியில் உருவாக்கலாம் என்ற யோசனையை ஜீ5 நிறுவனம் தெரிவித்தது. தமிழில் தலைக்கூத்தல் என்ற சடங்கை பின்னணியாகக் கொண்டு அப்படத்தை எடுத்தேன். வட இந்தியாவில் இதுபோன்ற சடங்கு கிடையாது. ஆனால் அங்கு வீட்டில் வயதானவர்கள், உடலுக்கு முடியாதவர்கள் இருந்தால் ஏழ்மை காரணமாக அவர்களை காசியில் சென்று விட்டு வந்துவிடுவார்கள்.
அந்த தீமை நான் இந்திக்காக எடுத்துக்கொண்டேன். தலைக்கூத்தல் என்பதால் 70 வயது முதியவரை அதில் நடிக்க வைத்தேன். இதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட 50 வயதுக்காரரை ஹீரோவாக தேர்வு செய்தேன். முதியவர் கேரக்டர் என்பதால் பலரும் அமிதாப் பச்சன் சாரை தேர்வு செய்ய சொன்னார்கள். ஆனால் 50 வயதுடையவர் என்பதால் அவரது மகன் அபிஷேக் பச்சன் இந்த வேடத்துக்கு பொருத்தமாக இருப்பார் எனத் தோன்றியது. அப்படித்தான் அவர் படத்தில் வந்தார். படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் இப்படத்தை பார்க்கலாம். இவ்வாறு மதுமிதா கூறினார்.