×

திருப்பங்கள் தரும் திருச்செந்தூரான் தரிசனம்

கந்த சஷ்டி சூரசம்ஹாரம் 30.10.2022 - ஞாயிற்றுக்கிழமை

ஐப்பசி மாதம் அமாவாசைக்கு அடுத்தநாள் பிரதமையிலிருந்து தொடங்கி சஷ்டி வரையில் அனுசரிக்கப்படும் முக்கியமான விரதம் கந்தசஷ்டி விரதம். ஆறு நாட்கள் அனுசரிக்கப்பட்டு, ஆறாவது நாள் சூரசம்ஹார நிகழ்ச்சியோடு நிறைவு பெறுகிறது. உதிக்கின்ற ஜோதி போல் தோன்றும் முருகனின் சூரசம்ஹார நிகழ்ச்சி சூரிய பகவானுக்குரிய ஞாயிற்றுக்கிழமையில் சுக்கிரனுக்குரிய பூராட நட்ஷத்திரத்தில் வருவது சாலச் சிறந்தது.

முருகப்பெருமானுக்கு வாகனம் மயில். அந்த மயில் தோகை விரித்து ஓங்காரமாய் ஆட, அதில் பிரணவப் பொருளாக முருகன் விளங்குவதை மனதில் சிந்திக்க வேண்டும். சட்டியில்(சஷ்டி) இருந்தால்தான் அகப்பையில் வரும் (கரு உற்பத்தியாகும்) என்பார்கள். புத்திரப்பேறு இல்லாதவர்களுக்கு கந்தசஷ்டி விரதம் மிகப்பெரிய பரிகாரமாக பரிந்துரைக்கப்பட்டு இருக்கிறது.

அது என்ன சூர சம்ஹாரம்?

சூரபத்மன் என்பவன் ஒவ்வொரு மனிதனிடத்திலும் அகங்காரம், ஆணவம் என்கின்ற குணத்தோடு மறைந்திருக்கின்றான். அந்த ஆணவ மலத்தை முற்றிலும் நீக்குவதே சூரசம்காரம் என்பதைப் புரிந்து கொண்டு இந்த விரதத்தை இருக்க வேண்டும். அஞ்ஞானத்தை நீக்கக்கூடிய கூர்மையான ஞானவேல் முருகனிடம் உண்டு. முருகப்பெருமானை வணங்கினால் ஒருவருக்கு அச்சம் விலகும். ஆறுதல் பிறக்கும்.

அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சல் என வேல் தோன்றும் - நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இரு காலும் தோன்றும்
முருகா என்று ஓதுவார் முன்.


மனதில் அச்சம் தோன்றும் போது ‘முருகா’ என்று ஓத ஆறுமுகம் தோன்றும். கடுமையான மனப் போராட்டத்தில் இருக்கும் போது ‘அஞ்சேல்’என்று வேல் தோன்றும்! மனதில் ஒரு பொழுது நினைத்தால் அவனது திருத்தாள் தோன்றும்.

ஆறுபடை வீடுகளில் திருச்செந்தூரில் மிகப் பிரசித்தி பெற்ற சூரசம்ஹார நிகழ்ச்சி, அலைகடல் ஓரத்தில் அற்புதமாக நடக்க இருப்பதை ஆயிரக்கணக்கான மக்கள் கூடிக் கண்டு மகிழ்வார்கள். எல்லா முருகன் தலங் களிலும் அன்று சிறப்பு வழிபாடுகளும், மாலையில் முருகப்பெருமானின் திருவீதி உலாவும் நடைபெறும்.

பொதுவாக கந்தசஷ்டி விரதம் ஆறு வருடங்கள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்பார்கள். ஒவ்வொரு நாளிலும் அதிகாலையில் கண்விழித்து, காலைக் கடன்களை முடித்து, குளிர்ந்த நீரில் நீராடி, தூய்மையான உடை அணிந்துகொண்டு, ஆலயத்திலோ பூஜை அறையிலோ முருகப் பெருமானை நினைத்து ஜபம் செய்ய வேண்டும்.திருப்புகழ் பாராயணம் சாலச் சிறந்தது. ஒரு பொழுது மட்டும், எளிய உணவு உண்டு(பால் பழம்) ஆறாம் நாள் சூர சம்ஹாரம் நாளன்று கோயில் வழிபாடு முடிந்து உணவு உட்கொள்ள வேண்டும்.

சூரபத்மனைப் பிளந்து மயிலும் சேவலுமாக்கிய வேலாயுதம்


முதலில் கிரௌஞ்ச மலையைத் தூளாக்கித் தாரகனை மாய்த்ததுடன், முருகன் கைவேலின் வெற்றிப்பயணம் தொடங்கியது. முருகனும் நவவீரர்களும் லட்சத்து வீரர்களும் தொடர்ந்து படைநடத்திக் கடற் கரையை அடைந்தனர். அங்கு கந்தமாதன கிரியில் முருகன் தங்கினார். அவர் வீரபாகு தேவரைச் சூரபத்மனிடம் தூது அனுப்பி பணிந்து தேவர்களை விடுவிக்கும்படிக் கேட்டார். சூரபத்மனோ அதை அலட்சியம் செய்து போர் புரிவதே லட்சியம் என்றான். முருகன் அவன் விருப்பப்படியே போரைத் தொடங்கினார். போரில் சூரபத்மனின் தம்பியான சிங்கமுகனும் புதல்வர்களான பானுகோபன், தருமகோபன் முதலியோர் வீரதீரத்துடன் போரிட்டு வீரசொர்க்கம் புகுந்தனர். அவர்களின் தேவியரும் அழல் புகுந்தனர்.

இறுதியாக, சூரபத்மன் போருக்கு வந்தான். முருகனுக்கும் அவனுக்கும் கடும் போர் நடந்தது. மாயையின் புதல்வனான சூரபத்மன் பற்பல மாயங்களைக் காட்டினான். சக்ரவாகப் பறவை, ஆயிரம் முகசிங்கம், கோரபூதகணங்கள், பெருங்காற்று, அக்னி, மழை போன்ற பற்பல வடிவங்களில் வந்து எல்லோரையும் அச்சப்படுத்தினான். அவனது மாயத் தாக்குதலுக்கு ஈடு கொடுக்காமல் தேவவீரர்கள் கலங்கினர். முருகன் அஞ்சாமல் தனது பாணங்களால் அசுரனின் மாயைகளை அழித்தார்.

அவனிடம், ‘‘நீ அனேக உருவங்களைக் காட்டினாயே இப்போது நான் எனது உருவத்தை காட்டுகிறேன் பார்,’’ என்று கூறி, அவனுக்குத் தனது விஸ்வரூபத்தைக்
காட்டினார்.அந்தப் பேருருவில் பெரிய பெரிய மலைகள் எல்லாம் அவரது பாதத்தின் கீழ் மத்தியிலும், சமுத்திரங்கள் எல்லாம் அவருடைய நுனிக்காலிலும், நட்சத்திரங்கள், மின்னல்கள், நவக்கிரகங்கள் ஆகியவைகள் அவருடைய கால் விரல்களிலும் அடங்கியிருந்தன. அவருடைய கால் ஆடு சதைகளில் முனிவர்களும், சிந்தாமணியும் முழங்கால்களில் வித்யை முதலானவைகளும், துடைகளில் இந்திரனும், ஜயந்தனும் இருந்தார்கள்.

அவருடைய இடுப்பின் சந்திகளில் காலனும் யமனும், இரண்டு விலாப்புறங்களிலும் தேவர்களும், இடுப்பில் அசுரர்களும் குஹ்ய பிரதேசங்களில் நாகர்களும் இருந்தார்கள். அவருடைய ஆண்மை அங்கத்தில் அமிர்தமும் காட்சியளித்தன. தொப்புளில் உலகங்கள் அனைத்தின் உற்பத்தியும், மார்பில் சாஸ்திரங்கள் அனைத்தும் வீற்றிருந்தன. அவரிடம் ஞானம் யக்ஞோபவீதமாக விளங்கிற்று. அவருடைய ரோமக் கால்களில் அநேக கோடி பிரும்மாண்டங்களும் காட்சியளித்தன.

உள்ளங்கையில் அனைத்துச் சுகங்கள், இரு கைகளில் பிரம்மாவும், விஷ்ணுவும், கைவிரல்களில் தேவமாதர்களும், கழுத்தில் வார்த்தைகள் அனைத்தும், வாக்கின் நடுவில் வேதங்களும், பற்களில் அட்சரங்களும், நாக்கில் சிவாகமங்களும், உதட்டில் ஏழு கோடி மகாமந்திரங்களும், அடங்கியிருந்தன. அவருடைய மூக்கில் வாயுதேவனும், கண்களில் சூரிய, சந்திரர்களும் இருந்தார்கள். அவருடைய காதுகளில் திசைகளும், நெற்றியில் ஓங்காரமும் அடங்கியிருந்தன.

அவரது விஸ்வரூபத்தைக் கண்ட தேவர்கள் அவரைப் பலவாறு துதித்தனர். அந்த வேளையில் சூரபத்மனின் மனதிலும் தெளிவும் ஞானமும் உண்டாயிற்று. அவன், ‘‘இவ்வளவு பெருந்தேவனையா நான் எளிய குழந்தை என்று எண்ணிக்கொண்டேன். நான் இவனோடு யுத்தம்புரிவது என் அறியாமையேயாகும்,’’ என்று எண்ணினான். ‘‘இவனை வெற்றி கொள்ள முடியாமல் நான் தோற்றாலும் எனக்குப் பெருமையே,’’ என்று சிந்தித்தான்.

முருகன் தனது வடிவத்தை முன் போலவே மாற்றிக்கொண்டார். பாசிக் குளத்தில் கல்லெறிந்தால் நீர் விலகி மூடுவது போல, சூரபத்மனுக்கும் முன்போலவே தீயஎண்ணங்கள் தோன்றிவிட்டன. அவன் பெரிய சக்ரவாகப் பறவையின் உருவத்தை எடுத்துப் போர் புரிந்தான். அவனது தாக்குதலால் எல்லோரும் கலங்கினர். முருகப்பெருமான் ‘‘இனி இவனை விடுதல் தகாது,’’ என்று தனது சுடர்வேலை அவன் மீது செலுத்தினார். பாய்ந்து வரும் அவரது வேலைக் கண்டான்.

கடலின் நடுவே பெரிய மாமரமானான். சகல உலகங்களிலும் அவனது கிளைகளைப் பரப்பினான். வேர்களைப் பாதாளத்தில் பாயவிட்டான். அவனது செயலால் பூமியைத் தாங்கும் மாகூர்மமும், எட்டு நாகங்களும், அஷ்ட திக் கஜங்களும் கலங்கிவிட்டன. நட்சத்திரங்கள் உதிர்ந்தன. எங்கும் இருள் பரவியது.முருகன் விடுத்த அந்த வேல், கோடி சூர்யப் பிரகாசத்துடன், மாமரத்தைத் தாக்கி, அதை இரண்டாகப் பிளந்தது. சூரபத்மன் சுய வடிவுடன் கத்தி, கேடயம் ஏந்தி எதிர்ப்பட்டான். வேல் அவன் மார்பில் புகுந்து அவனது உடலை இரண்டாகப் பிளந்து தள்ளியது. சூரன் மாண்டு வீழ்ந்ததும், வேல் கடலில் குளித்து முருகன் திருக்கரத்தை அடைந்தது.

இரண்டு பிளவாக வீழ்ந்த சூரனின் உடல்களில் ஒன்று மயிலாகவும், மற்றது வேலாகவும் ஆயின. முருகன் மயிலை வாகனமாக ஏற்றதுடன், சேவலைக் கொடியில் இருக்கும்படி வரமளித்தார். தமது முற்பிறப்பில் மயிலும் சேவலுமாகி முருகனுக்குப் பணி செய்ய விரும்பி சூரன், பத்மன் என்னும் இரண்டு அசுரகுமாரர்கள் தவம் செய்தனர். அவர்கள் மறுபிறப்பில் சூரபத்மனாக ஓருருவில் பிறந்தனர். வேல் பட்ட புண்ணியத்தால் அவர்கள் தம் விருப்பப்படியே மயிலும் சேவலுமாயினர்.

சூரனின் மார்பைப் பிளந்து அவனுக்கு மேலான அருளை வழங்கிய வேலை, அன்பர்கள் சூர்மா தடிந்த சுடர்வேல், அசுரன் அகலம் நீண்ட நெடுவேல் என்று போற்றுகின்றனர். வேல் சூரனின் மார்பைப் பிளந்த செய்தியை இலக்கியங்கள் தனிச் சிறப்புடன் போற்றுகின்றன. சூரனைப் பிளந்த சுடர் வடிவேல் என்று அன்பர்கள் கொண்டாடு கின்றனர். வேல் தோன்றியதன் பயன் சூரனை அழித்ததோடு முடியவில்லை. அது அடியவர்களைக் காக்கும் பணியில் தொடர்ந்து செயல்பட்டுவருகின்றது. அன்பர்கள் முருகனைப் போற்றுவதைப் போலவே அவனது வேலையும் மயிலையும் போற்றி வணங்கிவருகின்றனர்.

சேவல் ‘‘கொக்கரக்கோ’’ என்கிறதே, அதன் பொருள் என்ன ?

தமிழகத்தின் தொன்மைப் பறவை இனங்களில் சேவல் முதன்மை பெற்றுள்ளது. சேவல் என்ற சொல் ஆண் பறவைகளைக் குறிக்கும் பொதுச் சொல் என்றாலும், அது ஆண் கோழிகளுக்கு உரிய பெயராக நடைமுறையில் வழங்கியது. சமய வழிபாட்டில் சேவற் கோழி தனியிடம் பெற்றுள்ளது. குறிப்பாக முருக வழிபாட்டில் அது சிறப் பிடம் பெற்றுள்ளது. முருகன் சேவற்கொடியோன் என்றும், கோழிக் கொடியோன் என்றும் அழைக்கப்படுகின்றான்.

இலக்கியங்கள் காலைச் சூரியனை முருகனாகக் கூறுகின்றனர். குமார சூரியன் காலையில் உதயமாவதற்கான எக்காளம்போல் சேவல் ஊதி உணர்த்துகிறது என்பார்கள்.  அது ‘‘கொக்கரக்கோ’’ எனக் கூவுகிறது, அந்த கொக்கரகோ என்ற சொல்லைக் கொக்கு அது கோ என விரித்துப் பொருள் காண்பர். கொக்கு என்னும் சொல்மாமரத்தைக்
குறிக்கின்றது, போரின் இறுதியில் மாமரமாகி நின்ற சூரபத்மனை, கோ என்கிற தலைவன் அறுத்தான் என்பதே இதன் பொருளோகும். இப்படி தன் தலைவன் பெயரைக் கூறிக் கூவும் பறவையாகச் சேவல் விளங்குகிறது.

குறவர்கள்தம் குலத்தில் தோன்றிய வள்ளியம்மையை முருகனுக்குத் திருமணம் செய்து கொடுத்தனர், அப்போது மலையகத்தின் பறவையான கோழியையும் அளித்தனர். சேவல் போர்க்குணம் மிக்கதாகும். முன்னாளில் சேவல்களைப் பழக்கிச் சண்டைக்கு விடுவர். சேவல் சண்டை பார்ப்பது பொழுது போக்காக இருந்தது. இது கோழிச் சண்டை எனப்படும். கோழிகள் பாய்ந்து பாய்ந்து சண்டையிடும் காட்சியை மக்கள் கண்டு மகிழ்வர். நாட்டுப்புறங்களில் கோழிச் சண்டை வீரத்தை விளைவிக்கும் விளையாட்டாக விளங்கியது.

சில இடங்களில் போரிடும் சேவல்கள் போரில் வீரமரணம் அடைந்தபோது, அவற்றிற்கு நடுகல் எடுத்துள்ளனர். பாடல் பெற்ற திருத்தலமான அச்சிறுபாக்கத்திற்கு கிழக்கில் இந்தளூர் என்னும் ஊர் உள்ளது. இவ்வூரில் கோழிக்கு எடுக்கப்பட்ட நடுகல் ஒன்று உள்ளது.

ஆண்டாள், மீனாட்சி, பச்சையம்மன் முதலான தெய்வங்கள் பச்சைப் பசுங்கிளியையும் சிவபெருமான் மான்குட்டியையும் ஏந்துவது போல, முருகப் பெருமான் சேவலை ஏந்துகின்றார். தாராசுரத்திலுள்ள முருகனின் திருக்கரத்தில் சேவல் இருப்பதைக் காண்கிறோம். புலவர்கள் சேவல் ஏந்தும் செல்வக்குமரனாக முருகனைப் போற்றுகின்றனர். அருணகிரிநாதர்
திருச்செங்கோட்டு வேலனை

செங்சாலி கஞ்சம் ஒன்றாய் விளைந்த
செங்கோடமர்ந்த பெருமாளே
சென்றே இடங்கள் கந்தா எனும் பொழுது
செஞ்சேவல் கொண்டு வரவேண்டும்.


 - என்று பாடுகின்றார். திருச்செங்கோட்டில் மலைமீதுள்ள அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்திலுள்ள முருகப்பெருமானை திருச்செங்கோடன் கையில் செஞ்சேவலுடன் காட்சியளிக்கின்றார்.
சேவல் வீரத்திற்கும் வெற்றிக்கும் அடையாளமாக இருந்துவருகிறது.

Tags : Thiruchenduran ,
× RELATED ALP ஜோதிடம் ஓர் அறிமுகம்