ஊறும் மண்ணை பொன்னாக்கும் மனசுக்காரி!

உழவுக்கு உதவிடும் ஊர்க்காரி

ஊறும் மண்ணை

பொன்னாக்கும் மனசுக்காரி!

உள்ளமதை பக்தியால்  

ஆளும் உரிமைக்காரி!

எண்ணமதை சீர்தூக்கி

எழுத்தில் வரும் உறவுக்காரி

செல்வம் பதினாறு தந்து

சேர்ந்து வாழும் பாசக்காரி!

மங்கல பொட்டுக்காரி

மத்தாப்பு சிரிப்புக்காரி

மஞ்சள் சேலைக்காரி

பூங்கரக ஆட்டக்காரி

புதுவளையல் கரத்துக்காரி

பூச்சுற்றிய கூந்தல்காரி

மதிநுட்ப கண்ணுக்காரி

மானமுள்ள காவல்காரி!

வஞ்சனை மனப் பேயை

கஞ்சன் சேர்த்த பொருளை

விரட்டி அடிக்கும் வேப்பிலைக்காரி!

விளைச்சல் தரும் செல்லியம்மன்

துணிச்சல் தரும் எல்லம்மன்

தீயாய் வருவாள் திரவுபதியம்மன்

நோயை தடுப்பாள் பச்சையம்மன்!

குளக்கரை முனியம்மா

குலசாமி முனுசாமி

மூதாதையர் நம்பிக்கை

முன்னேற்றம் நம் வாழ்வில்!

முடிச்சி காசு கட்டிவைச்சு

முயற்சியை தொட்டுவச்சா

முடியாத காரியம் ஒன்றுண்டோ

முளைக்கும் சந்ததிக்கு குறையுண்டோ!

ஊருக்கு ஒளி விளக்கு

உள்ளன்பு ஒளிர மாவிளக்கு!

புதுப்பானை புத்தரிசி பொங்கச்சோறு

தித்திக்கும் வாழ்வு வெல்லம்சேரு!

இலைக்கு நிறமூட்டும் நரம்பாய்

கலைக்கு உயிரூட்டும் கன்னியம்மா!

ஆடிமாதம் முளைப்பாரி,பால்குடம்

அமுதம் பொங்கும் பொன்னியம்மா!

நறுமண மலராய்

பல்சுவை கனியாய்

நடனமாடும் தேவியம்மா!

நாலு திசை ஊருக்கு

நீதான் காவலம்மா!

ஊருபோல மனசும்

அமைதியா இருக்குது

பேச்சியம்மன் அருளால்

பிழைப்பு நடக்குது!

விஷ்ணுதாசன்

Related Stories: