நாகை மாவட்டம் திருச்செங்காட்டங்குடியில் அருள் பாலிக்கும் விநாயகப் பெருமான் கஜமுகாசுரனை அழித்தவர். கஜமுகாசுரனின் ரத்தம் படிந்து ஊரே செங்காடாக மாறியதால் திருச்செங்காட்டங்குடி என்ற பெயர் உருவானது. கணபதீச்வரம் என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது. கஜமுகாசுரனைக் கொன்ற பாவம் தீர விநாயகப் பெருமான் இத்தல உத்திராபதீஸ் வரரை வழிபட்டுள்ளார். இவர் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள மண்டபம் உயரம் மிகவும் குறைவாக உள்ளதால் அம்மண்டபத்தில் நின்று கொண்டு விநாயகரை தரிசிக்க முடியாது. மண்டியிட்டுதான் தரிசிக்க முடியும். பல்லவ மன்னனின் சேனாதிபதியாகப் பணியாற்றிய, சிறுத்தொண்டரான பரஞ்சோதி, வாதாபி சென்று சாளுக்கியரோடு போர் புரிந்து வெற்றி வாகை சூடிய போது கொண்டு வந்த கணபதிதான் இவர். அதனால் இவர் வாதாபி கணபதி என்றும் வணங்கப்படுகிறார்.