திருவையாறு: சப்தஸ்தான விழாவையொட்டி திருவையாறு ஐயாரப்பர் கோயில் சுவாமி ஏழூர் புறப்பட்டு சென்றது. இன்று பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடக்கிறது. தஞ்சை மாவட்டம் திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் கடந்த 10ம் தேதி நடந்தது. கடந்த 14ம் தேதி மாலை சுவாமி தன்னைத்தானே பூஜித்தல் நடந்தது. கடந்த 18ம் தேதி கோயில் தேரோட்டம் நடந்தது. இந்நிலையில் நேற்று முக்கிய விழாவான சப்தஸ்தான பெருவிழா நடந்தது. இதையொட்டி நேற்று காலை அறம்வளர்த்த நாயகியுடன் ஐயாறப்பர் கண்ணாடி பல்லக்கிலும், சுயசுவாம்பிகையுடன் நந்திகேஸ்வரர் வெட்டிவேர் பல்லக்கிலும் புறப்பட்டனர்.