மண்ணச்சநல்லூர்: மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோயிலில் சித்திரை தேர் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. வருகிற 18ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருப்பைஞ்சீலியில் அமைந்துள்ளது நீலிவனேஸ்வரர் கோயில். இக்கோயில் திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற சிறப்பு திருத்தலமாகும். களைப்புற்று வந்த அப்பருக்கு சிவபெருமான் திருக்கட்டமுது அளித்து காட்சியளித்த சிறப்புடையதாகும். இக்கோயிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் பல முக்கிய திருவிழாக்களில் ஒன்று சித்திரை தேர் திருவிழா. இந்த ஆண்டு சித்திரை தேர் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு சுவாமி மற்றும் அமபாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.