சுசீந்திரம்: சுசீந்திரம் அருகே உள்ள பறக்கை மதுசூதன பெருமாள் கோயில் பங்குனி பெருந்திருவிழா நேற்று தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. முதல் நாளான நேற்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து கொடி மரத்துக்கு பூஜைகள் செய்து மாத்தூர்மட தந்திரி சங்கரநாராயணரு கொடியேற்றினார். இரவு 9.30 மணியளவில் சுவாமி பூ பந்தல் வாகனத்தில் பவனி வருதல் நடந்தது. தொடர்ந்து விழா நாட்களில் தினமும் காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 6 மணி மற்றும் இரவு 9.30 மணிக்கு சுவாமி பவனி வருதல், கலை நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள், சிறப்பு அபிஷேகம், தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.
9ம் நாள் விழாவான 19ம் தேதி காலை கணபதி ஹோமம், 8 மணிக்கு சுவாமி அம்பாள் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி தேரோட்டம் நடக்கிறது. 12 மணிக்கு அன்னதானம், இரவு 9 மணிக்கு சப்தாவர்ண காட்சி, 9.30 மணிக்கு சுவாமி வேட்டைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 10ம் திருவிழாவான 20ம் தேதி காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், பிற்பகல் 3 மணிக்கு வெள்ளி கருட வாகனத்தில் சுவாமி ஆறாட்டு துறைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி, இரவு 11 மணிக்கு தெப்ப திருவிழாவும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில்களின் இணை ஆணையர் அன்புமணி, கண்காணிப்பாளர் ஜீவானந்தம், ஸ்ரீகாரியம் ஹரி பத்மநாபன் மற்றும் பக்தர்கள், பொதுமக்கள் செய்கின்றனர்.