பழநி: பழநி மலைக்கோயிலில் நவராத்திரி விழா காப்புக்கட்டுதலுடன் நேற்று துவங்கியது. திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில், 11 நாட்கள் நடைபெறும் நவராத்திரி விழா நேற்று மலைக்கோயிலில் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. உச்சிகாலத்தில் விநாயகர், மூலவர், உற்சவர், நவவீரர்கள், துவாரபாலகர்கள், தீபஸ்தம்பத்திற்கு காப்புகள் கட்டப்பட்டன. நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையர் செல்வராஜ் மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். 11 நாட்களும் பெரியநாயகி அம்மன் கோயிலில் பக்தி சொற்பொழிவு, மங்கள இன்னிசை, பக்தி இன்னிசை, பரத நாட்டியம், கிராமிய நடனம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
விழாவின் 11 நாளான 19ம் தேதி மலைக்கோயிலில் பகல் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை, பிற்பகல் 3.05 மணிக்கு மலைக்கோயிலில் இருந்து பராசக்திவேல் பெரியநாயகி அம்மன் கோயிலுக்கு வந்தடைவது, மாலை 6 மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில் முத்துக்குமாரசுவாமி கோதைமங்கலம் புறப்பட்டு அம்பு போடுவது உள்ளிட்டவை நடைபெறும். இந்நிகழ்ச்சியில் பழநி ஆதீனம் சிவானந்த புலிப்பாணி சுவாமிகள் வன்னிகாசூரனை வதம் செய்யும் நிகழ்வு நடைபெறும்.
தங்கரத புறப்பாடு நிறுத்தம்நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு இன்று முதல் வரும் 19ம் தேதி வரை 10 நாட்களுக்கு மலைக் கோயிலில் தங்கரத புறப்பாடு நிறுத்தம் செய்யப்படும். 20ம் தேதி வழக்கம்போல் தங்கரத புறப்பாடு நடைபெறும். மேலும், நவராத்திரியை முன்னிட்டு வடக்கு கிரிவீதியில் உள்ள புலிப்பாணி ஆசிரமத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதனை காண உக்ரைன் நாட்டில் இருந்து 5க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆசிரமத்திற்கு வந்து தங்கி உள்ளனர்.