மிகவும் சிக்கலான திரைக்கதையின் மூலம் பெண்களின் உளவியல் மற்றும் சமூகப் பிரச்னைகளை யதார்த்தமான கோணத்தில் சொல்லியிருக்கிறார், இயக்குநர் யஷ்வந்த் கிஷோர். 4 பெண்களின் வாழ்க்கையை இயல்பாகச் சொன்ன அவர், அவற்றை இணைக்கும் புள்ளியை இன்னும் எளிமையாகச் சொல்லியிருக்கலாம். எனினும், கனமான விஷயத்தை திறம்பட கையாண்டதற்காக அவரை வரவேற்கலாம். 4 ஹீரோயின்களில், நடிப்பில் கீர்த்தி பாண்டியன் டாப் இடத்தைப் பிடிக்கிறார். கருவைக் கலைக்கும் கட்டாயம், குழந்தை மீது பாசம் என்று இருவிதமான மனநிலையில் தவிக்கிறார். அடுத்து, அம்மு அபிராமி. திருமணமே ஆகாத தவிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். அவருக்கும், தந்தை மயில்சாமிக்குமான பாசம் குறிப்பிடத்தக்கது. விவாகரத்து பெண்ணின் மனம் எப்படி தவிக்கும் என்பதை அற்புதமாக உணர்த்துகிறார், வித்யா பிரதீப்.
இன்றைய நவீன யுக பெண்ணைக் கண்முன் கொண்டு வந்து அதிர்ச்சியும், ஆச்சரியமும் ஏற்படுத்தி இருக்கிறார் ஷாலின் சோயா. ஆண்களின் கேரக்டருக்கு முக்கியத்துவம் இருந்தாலும், கதை முழுவதும் பெண்களின் மீதே பயணிப்பதால், அவர்கள் அதிகமாக கவனிக்கப்படவில்லை. அம்மா கேரக்டரில் மவுனிகா நடித்துள்ளார். ஷான் ரஹ்மான், அரவிந்த் சுந்தர் ஆகியோரின் பின்னணி இசை கதையோட்டத்துக்கு ஆங்காங்கே வழிவிட்டும், வழிநடத்தியும் சென்றிருக்கிறது. ராம்ஜியின் ஒளிப்பதிவு சிறப்பு. பெண்களின் பிரச்னைகள் குறித்து பேசும் படம் என்றாலும், ஆண்கள் தரப்பு நியாயத்தையும் அதற்கு நிகராகப் பேசியிருக்க வேண்டும். அழகான பெண் அம்மு அபிராமிக்கு மாப்பிள்ளையே கிடைக்கவில்லை என்பதை நம்ப முடியவில்லை. எனினும், ‘கண்ணகி’ கண்ணியமானவள்.
The post கண்ணகி: விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.