சிறந்த கைவினைஞர்களுக்கு வாழும் கைவினை பொக்கிஷம் பூம்புகார் மாநில விருதுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: சிறந்த கைவினைஞர்களுக்கு வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதுகள் மற்றும் பூம்புகார் மாநில விருதுகள் வழங்கி, கைத்திறத் தொழில்கள் சார்ந்த 7 பொதுப் பயன்பாட்டு மையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கைவினைத் தொழிலுக்காகவே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட 65 வயதுக்கும் மேற்பட்ட 10 சிறந்த கைவினைஞர்களுக்கு தமிழ்நாடு அரசால் “வாழும் கைவினைப் பொக்கிஷம்’’ எனும் விருது வழங்கப்படுகிறது. தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தால் ஆண்டுதோறும் 15 லட்சம் மதிப்பில் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 10 பிரிவுகளில், ஒவ்வொரு பிரிவிற்கும் ஒருவர் வீதம் மொத்தம் 10 பேருக்கு 8 கிராம் தங்கப் பதக்கம், தாமிர பத்திரம், சான்றிதழுடன் ஒரு லட்சம் ரூபாய் காசோலை வழங்கப்படுகிறது.அதன்படி, 2021-22ம் ஆண்டிற்கான “வாழும் கைவினைப் பொக்கிஷம்’’ விருதுகள் மாரிமுத்து (தஞ்சாவூர் கலைத் தட்டு), மாரியப்பன் (தஞ்சாவூர் ஓவியம்), தங்கராஜா (வீணை கைத்திறத் தொழில்), விசுவநாதன் (பஞ்சலோக சிற்பம்), ராமலிங்கம் (காகிதக் கூழ் பொம்மை), முத்துசிவம் (கோயில் நகைகள்), கமலம் (இயற்கை நார் பொருட்கள்), விஜயவேலு (சுடுகளிமண் பொம்மைகள்), பிரணவம் ஸ்தபதி பஞ்சலோக சிற்பம், வடிவேல் கடல் சிப்பி பொருட்கள் ஆகிய 10 விருதாளர்களுக்கு முதல்வர் விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.“பூம்புகார் மாநில விருது” தமிழ்நாட்டின் சிறப்பான கைவினைஞர்களின் கைத்திறத் தொழிலின் பங்களிப்பு, அபிவிருத்தி மற்றும் படைப்புகளை கருத்தில் கொண்டு வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக பத்து கைவினைஞர்களுக்கு ஆண்டுதோறும் 12 லட்சம் ரூபாய் மதிப்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகள் ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகை, 4 கிராம் தங்கப் பதக்கம், தாமிரபத்திரம் மற்றும் தகுதிச் சான்றிதழும் கொண்டதாகும். அதன்படி, 2021-22ம் ஆண்டிற்கான பூம்புகார் மாநில விருதுகளை, கதிரவன் (மரச்சிற்பம்), தென்னரசு (தஞ்சாவூர் ஓவியம்), சகாயராஜ் (மரச்சிற்பம்), கோபு (பஞ்சலோக சிலை), யுவராஜ் (மரச்சிற்பம்), ராதா (நெட்டி வேலை), நாகப்பன் (கற்சிற்பம்), மகேஸ்வரி (காகிதக் கூழ் பொம்மைகள்), ராஜேந்திரன் (வீணை கைத்திறத் தொழில்), செல்லம்மை (இயற்கை நார் பொருட்கள்) ஆகிய 10 விருதாளர்களுக்கு முதல்வர் விருதுகளை வழங்கினார்.மேலும், தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம், காஞ்சிபுரம் மாவட்டம் கலியனூர் (காகிதக்கூழ் பொம்மைகள்), திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் (மரவர்ணக் கடைசல்), பெரம்பலூர் மாவட்டம் – அரும்பாவூர் (மரச்சிற்பங்கள்), ஈரோடு மாவட்டம் ஆசனூர் (ஒன்னிக்குச்சி கைத்திறத் தொழில்), சேலம் மாவட்டம் தம்மம்பட்டி (மரச்சிற்பங்கள்), விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி (சுடுகளிமண் கைத்தொழில்), திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை (பத்தமடை பாய்) ஆகிய இடங்களில் கைவினைஞர்களின் நலனுக்காக 3 கோடியே 94 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 7 பொது பயன்பாட்டு மையங்களையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.இந்த பொது பயன்பாட்டு மையங்களில் கைவினை குழுமங்களைச் சேர்ந்த கைவினைஞர்கள் ஒன்று கூடி, இங்கு பொருத்தப்பட்டுள்ள நவீன இயந்திரங்கள் மற்றும் கருவிகளை பயன்படுத்தி, கைவினைப்பொருட்களை எளிதாகவும், விரைவாகவும் தயாரித்து, விற்பனை செய்து பயன்பெற்றுக் கொள்ளலாம். மேலும், நலிந்த கைவினைத் தொழில்களான சுடுகளிமண் மற்றும் பத்தமடை பாய் போன்ற கைவினைத் தொழில் செய்யும் கைவினைஞர்களுக்கும் நவீன இயந்திரங்களுடன் கூடிய பொது பயன்பாட்டு மையங்கள் விக்கிரவாண்டி மற்றும் பத்தமடையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களின் மூலம் சுமார் 5,000 கைவினைஞர்கள் பயன்பெறுவார்கள்.இந்நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும்  நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைச்  செயலாளர் இறையன்பு, கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை  முதன்மை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ் பங்கேற்றனர். “பூம்புகார் மாநில விருது” தமிழ்நாட்டின் சிறப்பான கைவினைஞர்களின் கைத்திறத் தொழிலின் பங்களிப்பு, அபிவிருத்தி மற்றும் படைப்புகளை கருத்தில் கொண்டு வழங்கப்படுகிறது….

The post சிறந்த கைவினைஞர்களுக்கு வாழும் கைவினை பொக்கிஷம் பூம்புகார் மாநில விருதுகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: