கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி வழியாக கடத்தப்பட்ட ₹52 லட்சம் மதிப்பிலான குட்கா, ₹10 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை போலீசார் கைப்பற்றினர். இதை பார்வையிட்ட எஸ்பி., சரோஜ்குமார் தாக்கூர், குட்கா, மதுபானங்கள் கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வெளி மாநிலங்களில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு மதுபானங்கள் குட்கா, கஞ்சா கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, மத்திகிரி பூனப்பள்ளி சோதனை சாவடியில் நேற்று முன்தினம் சரக்கு வாகனத்தை சோதனை செய்த போது ₹52 லட்சம் மதிப்பிலான 10 டன் குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை பெங்களூருவில் இருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு கடத்திச்சென்றது தெரிய வந்தது. இதுதொடர்பாக டிரைவர் தர்மலிங்கம், கிளீனர் மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சரக்கு வேனின் எண்ணை மாற்றி, குட்கா கடத்த பயன்படுத்தி உள்ளனர். அதேபோல், ஓசூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தேன்கனிக்கோட்டை அருகே மலைசோனை கிராமத்தில் ராஜண்ணா என்பவரின் மாட்டு கொட்டகையில் சோதனையிட்டனர். இதில், ₹10 லட்சம் மதிப்பிலான 3 ஆயிரம் லிட்டர் கர்நாடக மாநில மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக சங்கர், ராஜண்ணா என்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள், கஞ்சா ஆகியவை கடத்தல் முற்றிலுமாக தடுப்பதுடன், கடத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், வெளி மாநில மதுபாட்டில்கள் கடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். குட்கா கடத்தல் கும்பலை பிடித்த டிஎஸ்பி சிவலிங்கம், இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் எஸ்ஐ சிற்றரசு, எஸ்எஸ்ஐ பூபதி ராமராஜூலு, ஏட்டுகள் ரமேஷ், குமரவேல், சகாய அந்தோணிராஜ் ஆகியோருக்கும், ₹10 லட்சம் மதுபாட்டில்களை பறிமுதல் செய்த இன்ஸ்பெக்டர் பங்கஜம், எஸ்ஐ செல்வராகவன், ஏட்டுகள் சுந்தர்ராஜன், அழகரசன், சந்திரன், பூபாலன், செல்வம் ஆகியோருக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். அப்போது ஏடிஎஸ்பி விவேகானந்தன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சசிகலா மற்றும் போலீசார் உடனிருந்தனர்.7 கொலை வழக்குகளில் விரைந்து நடவடிக்கைமேலும், எஸ்.பி. சரோஜ்குமார் தாக்கூர் கூறுகையில், ‘மாவட்டத்தில் நீண்ட காலமாக விசாரணையில் உள்ள கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டது. அதன்பேரில், உத்தனப்பள்ளி அருகே 5 ஆண்டுக்கு முன்பு நடந்த ஒரு கொலை வழக்கில், குற்றவாளி கைது செய்யப்பட்டார். குருபரப்பள்ளி அருகே நடந்த மற்றொரு கொலையிலும், சிங்காரப்பேட்டை அருகே நடந்த மற்றொரு கொலையிலும் துப்பு கிடைத்துள்ளது. குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள். இதைத்தவிர கொலை செய்யப்பட்டவர் யார்? என தெரியாமல் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் உள்ள 7 கொலை வழக்குகளில் விசாரணை நடந்து வருகிறது. விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள். கொலை வழக்கில் குற்றவாளியை பிடித்த தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி கிருத்திகா தலைமையிலான தனிப்படையினருக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துகொள்கிறேன்’ என்றார்….
The post வெளி மாநிலங்களில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக குட்கா, மது கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை-எஸ்.பி., எச்சரிக்கை appeared first on Dinakaran.