ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் பங்குனி தேர்த்திருவிழா ஆளும் பல்லக்குடன் நிறைவு

திருச்சி : ஸ்ரீரங்கம்  ரெங்கநாதர் கோவிலில் பங்குனி தேர்த்திருவிழா நேற்று ஆளும்பல்லக்குடன் நிறைவு பெற்றது.ஸ்ரீரங்கம்  ரெங்கநாதர் கோவில் பங்குனி தேர்த்திருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் காலை, மாலை வேளைகளில் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.சிறப்பு நிகழ்ச்சிகளாக கடந்த 13ம் தேதி தங்க கருட வாகனத்தில் வீதி உலா வந்தார். 17ம் தேதி நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் வீதி உலா வந்து, பங்குனி தேர் அருகில் வையாளி கண்டருளினார். 18ம் தேதி ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் நம்பெருமாள் தாயார் சேர்த்தி சேவை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 19ம் தேதி நடைபெற்றது. நேற்று முன் தினம் இரவு சப்தாவரணம் நிகழ்ச்சியை தொடர்ந்து திருவிழாவுக்கென ஏற்றப்பட்ட கொடியிறக்கப்பட்டது.திருவிழாவின் 11-ம் நாளான நேற்று மாலை நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் வீதி உலா வந்தார். இதையொட்டி மாலை 3 மணியளவில் நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 3.15 மணிக்கு கருட மண்டபம் வந்து சேர்ந்தார்.பின்னர் அங்கிருந்து மாலை 6.30 மணியளவில் புறப்பட்டு வாகன மண்டபத்திற்கு இரவு 7 மணிக்கு வந்தார். அங்கிருந்து இரவு 7.30 மணிக்கு ஆளும்பல்லக்கில் சித்திரை வீதிகளில் வலம் வந்து இரவு 8.30 மணியளவில் வாகன மண்டபம் வந்தடைந்தார். பின்னர் 9 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைந்தார். பங்குனி தேர்திருவிழா ஆளும் பல்லக்குடன் நிறைவு பெற்றது.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணைஆணையர் மாரிமுத்து, கோவில் உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், உதவிஆணையர் கந்தசாமி மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்….

The post ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் பங்குனி தேர்த்திருவிழா ஆளும் பல்லக்குடன் நிறைவு appeared first on Dinakaran.

Related Stories: