விக்ரமின் நடிப்பை நேசிக்கிறேன்: அனுராக் கஷ்யப்

மும்பை:இந்தி சினிமாவில் வித்தியாசமான முயற்சிகளை கையாள்வதற்கு பெயர் போனவர் இயக்குனர் அனுராக் கஷ்யப். தமிழில் இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். தொடர்ந்து இந்தி படங்களிலும் நடித்தார். அவரது இயக்கத்தில் கென்னடி என்ற படம் திரைக்கு வர உள்ளது. இது பற்றி அனுராக் கஷ்யப் கூறியது: கென்னடி படத்துக்காக கேன்ஸ் பட விழாவில் கிடைத்த கவுரவம் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. இந்த படத்தில் முதலில் விக்ரமைத்தான் ஹீரோ கேரக்டரில் நடிக்க வைக்க விரும்பினேன். இதற்காக அவரது பெயரில் இருந்த செல்போன் எண்ணுக்கு மெசேஜ் அனுப்பினேன். எனக்கு பதில் வரவில்லை. இதனால் ராகுல் பட் இதில் நடித்தார்.

பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரமுடன் சோபிதா துலிபாலா நடித்திருந்தார். சோபிதா மும்பைக்கு வந்தபோது, எனது மெசேஜுக்கு ஏன் விக்ரம் பதிலளிக்கவில்லை என கேளுங்கள் என்றேன். இந்நிலையில் மறுநாள் எனக்கு ஒரு போன் கால் வந்தது. நான் விக்ரம் பேசுகிறேன் என்றார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அப்போதுதான் நான் அவரது பயன்படுத்தாத செல்போன் எண்ணுக்கு மெசேஜ் அனுப்பியதும், அதை அவர் பார்க்காததும் தெரியவந்தது. இதனால் நான்தான் விக்ரமிடம் வருத்தம் தெரிவித்தேன். சேது படத்திலிருந்து விக்ரமின் நடிப்பை பார்த்து வருகிறேன். அவரது நடிப்பை நான் நேசிக்கிறேன். கண்டிப்பாக எதிர்காலத்தில் நாங்கள் இணைந்து பணியாற்றுவோம் என நம்புகிறேன்.

The post விக்ரமின் நடிப்பை நேசிக்கிறேன்: அனுராக் கஷ்யப் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: