அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் ஆஜர்: ஆன்லைன் சூதாட்ட வழக்கில் திருப்பம்

ஐதராபாத்: சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரப் பணமோசடி தொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜிடம் அமலாக்கத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம், திருச்சியைச் சேர்ந்த ஜுவல்லர்ஸ் கடை தொடர்பான ₹100 கோடி போலி நிதி நிறுவன மோசடி வழக்கில் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியது. அந்த நிறுவனத்தின் விளம்பரத் தூதராக அவர் செயல்பட்ட நிலையில், போலி தங்க முதலீட்டுத் திட்டத்தின் மூலம் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக, மேற்கண்ட தங்க முதலீட்டுத் திட்டம் சம்பந்தமான நிதிப் பரிவர்த்தனைகள் குறித்து விளக்கம் அளிக்க, கடந்த 2023 டிசம்பர் 5ம் தேதி சென்னையில் ஆஜராகும்படி அவருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில், சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியது தொடர்பான பணமோசடி விசாரணைக்காக, நடிகர் பிரகாஷ் ராஜ் இன்று ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானார். ஜங்லீ ரம்மி போன்ற தளங்களுக்கு ஆதரவளித்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த விசாரணை நடைபெற்றது. தெலங்கானா மற்றும் ஆந்திராவில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளின் அடிப்படையில், பிரகாஷ் ராஜ், ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட பிரபலங்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

The post அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் ஆஜர்: ஆன்லைன் சூதாட்ட வழக்கில் திருப்பம் appeared first on Dinakaran.

Related Stories: