நாஞ்சில் சம்பத், சுகி.சிவம், நெல்லை கண்ணன் உள்பட தமிழ் அறிஞர்களுக்கு விருதுகள்: பரிசு தொகை 2 லட்சமாக உயர்வு; முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: நாஞ்சில் சம்பத், சுகி.சிவம், நெல்லை கண்ணன் உள்ளிட்ட பல்வேறு தமிழ் அறிஞர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழ்மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளை ஏற்படுத்தி வழங்கிவருகிறது.  அவ்வகையில் தமிழ்நாடு அரசின் விருதுகளுக்கான விருதாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.2021ம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா விருதுக்கு நாஞ்சில் சம்பத், மகாகவி பாரதியார் விருது பாரதி கிருஷ்ணகுமாருக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது புலவர் செந்தலை கவுதமனுக்கும், சொல்லின் செல்வர் விருது சூர்யா சேவியருக்கும், சிங்காரவேலர் விருது கவிஞர் மதுக்கூர் ராமலிங்கத்திற்கும், தமிழ்த்தாய் விருது மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்திற்கும்,  அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது முனைவர் இரா.சஞ்சீவிராயருக்கும், சி.பா. ஆதித்தனார் திங்களிதழ் விருது உயிர்மை திங்களிதழுக்கும், தேவநேயப்பாவாணர் விருது முனைவர் கு. அரசேந்திரனுக்கும், உமறுப்புலவர் விருது நா.மம்மதுக்கும், கி.ஆ.பெ. விருது முனைவர் ம.ராசேந்திரனுக்கும்,   கம்பர் விருது பாரதி பாஸ்கருக்கும், ஜி.யு.போப் விருது ஏ.எஸ்.பன்னீர்செல்வனுக்கும், மறைமலையடிகள் விருது சுகி.சிவத்திற்கும்,  இளங்கோவடிகள் விருது நெல்லை கண்ணனுக்கும், அயோத்திதாசப் பண்டிதர் விருது ஞான.அலாய்சியஸ்சுக்கும் வழங்கிட ஆணையிடப்பட்டுள்ளன. இவ்வாண்டு முதல் விருது பெறும் ஒவ்வொருவருக்கும் விருது தொகை ஒரு லட்சம் ரூபாயிலிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தியும் மற்றும் ஒரு சவரன் தங்கப்பதக்கம், விருதுக்கான தகுதியுரை ஆகியன வழங்கி பொன்னாடை அணிவித்துச் சிறப்பிக்கப் பெறுவர். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்….

The post நாஞ்சில் சம்பத், சுகி.சிவம், நெல்லை கண்ணன் உள்பட தமிழ் அறிஞர்களுக்கு விருதுகள்: பரிசு தொகை 2 லட்சமாக உயர்வு; முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: