சென்னை: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: காஷ்மீரின் முக்கிய சுற்றுலாதலமான பஹல்காம் என்ற இடத்தில் பயங்கரவாதிகளின் திடீர் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்துள்ளனர். இக்கொடூரச் செயலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது, உயிரிழந்தவர்கள், படுகாயம் அடைந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. இந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரழந்தவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டை ஒன்றிய அரசு வழங்க வேண்டும்.
காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சைக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும் ஒன்றிய அரசு செய்யவேண்டும். அவர்களுக்கு உரிய நிவாரண தொகையையும் வழங்க வேண்டும். ஒன்றிய அரசின் உளவுத்துறை மோடி ஆட்சியில் செயலிழந்து விட்டது. இக்கொடூர நிகழ்விற்கு ஜம்மு – காஷ்மீர் தொடர்பான ஒன்றிய அரசின் தவறான கொள்கையும், செயல்பாடுகளுமே காரணம். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு ஒன்றிய அரசு தார்மீக பொறுப்பேற்க வேண்டும். தாக்குதலின்போது சுற்றுலா பயணிகளை காப்பதில் குதிரை ஏற்ற பயிற்சியாளர் சையத் அடில் ஹுசைன் ஷா என்பவர் மிகப் பெரும் பங்களிப்பை செலுத்தியுள்ளார்.
பலரை காப்பாற்றியுள்ளார். ஒரு பெண்ணை காப்பாற்றும் முயற்சியில் தனது உயிரை இழத்துள்ளார். அவருடைய வீரதீரச் செயலை பாராட்டுகிறது. அவரது குடும்பத்தினருக்கும் உரிய நிவாரணத் தொகையை ஒன்றிய அரசு வழங்கக வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: இந்திய கம்யூனிஸ்ட் கடும் கண்டனம் appeared first on Dinakaran.