உடல் நிலை பிரச்னை மனம் திறந்தார் ஏ.ஆர்.ரஹ்மான்

சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சமீப காலமாக பரபரப்பான செய்திகளில் அடிபடும் பிரபலமாக மாறி இருக்கிறார். இவர் தன்னுடைய மனைவி சாய்ரா பானுவை கடந்த ஆண்டு விவாகரத்து செய்து பிரிய உள்ளதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த பரபரப்பு ஓய்ந்த சில மாதங்களிலேயே அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார் ஏ.ஆர்.ரஹ்மான்.

உடல்நலம் பாதிக்கப்பட்ட பின் எந்தவித பேட்டியும் கொடுக்காமல் இருந்த ஏ.ஆர்.ரஹ்மான், சமீபத்தில் அளித்த பேட்டியில், அதுபற்றி மனம்திறந்து பேசி இருக்கிறார். அதில் அவர் கூறியதாவது :நான் நோன்பு இருந்ததாலும், சைவமாக மாறியதாலும் எனக்கு இரைப்பையில் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டேன். அதன்பின்னர் என்ன ஆனது என்பதை என்னைப் பற்றி வந்த செய்திகள் மூலம் தான் தெரிந்துகொண்டேன். நான் வாழ வேண்டும் என்று இவ்வளவு பேர் விரும்புகிறார்கள் என்பதை அறிந்தது மகிழ்ச்சியாக இருந்தது என கூறினார்.

தனது தனிப்பட்ட வாழ்க்கை தலைப்புச் செய்தி ஆவது பற்றி ரஹ்மான் கூறுகையில், ‘‘நீங்கள் மனிதனாக உணராத ஒருவரை சில நேரங்களில் வெறுக்கக் கூடும். நானும் ஏற்ற தாழ்வுகளை எதிர்கொண்டேன். அதுவே உண்மை’’ என்றார். ரஹ்மான் தற்போது தன்னுடைய இசை நிகழ்ச்சிக்காக தயாராகி வருகிறார். மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டில் ஸ்டேடியத்தில் வருகிற மே 3ம் தேதி அவரது இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையடுத்து இந்த ஆண்டு அமெரிக்காவில் உள்ள 18 நகரங்களில் wonderment என்கிற பெயரில் இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளார் ரஹ்மான்.

The post உடல் நிலை பிரச்னை மனம் திறந்தார் ஏ.ஆர்.ரஹ்மான் appeared first on Dinakaran.

Related Stories: