தொழிற்சாலைகள் இல்லாத மாவட்டங்களே இல்லை என்று சொல்கின்ற அளவுக்கு, அனைத்து மாவட்டங்களிலும் தொழிற்சாலைகளை நிறுவிக் கொண்டிருக்கிறோம். அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், மாற்றுத்திறனாளிகள் தேர்தலில் போட்டியிடாமல், நேரடியாக உறுப்பினராக ஒரு சட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறேன். இதனால், தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுடைய குரல் ஒலிக்கப் போகிறது. இதுபோல, நம்முடைய ஆட்சியில் தன்னம்பிக்கையும் வளர்ந்திருக்கிறது, தமிழ்நாடும் வளர்ந்திருக்கிறது. இதைத்தான் சிலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஆட்சியின் மேல் நியாயமாக எந்தக் குறையும் சொல்ல முடியாமல், இப்போது அவதூறு பரப்பிக் கொண்டு வருகிறார்கள். சட்டம்-ஒழுங்கு, அரசு நிர்வாகம் என்று அனைத்திலும், தமிழ்நாடு சிறப்பாக செயல்படுகிறது. அனைத்துத் தரவுகள், தரவரிசைகளிலும் தெளிவாக இன்றைக்கு நாம் அதை பார்க்கிறோம்.
ஆனால், தமிழ்நாட்டில் இருக்கின்ற சில எதிர்க்கட்சிகள், தமிழ்நாட்டுக்கே எதிரிக்கட்சிகள் மாதிரி செயல்படுகிறார்கள். அவர்கள் எண்ணம் என்ன? தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் துரோகம் இழைக்கக் கூடிய கூட்டத்துடன் உறவாடி, தமிழ்நாட்டையே அடகு வைக்கவேண்டும். இதுதான் அந்த சந்தர்ப்பவாதிகளின் ஒரே எண்ணமாக இருக்கிறது. திமுகவை பொறுத்தவரைக்கும் நீட் தேர்வை எதிர்ப்பதாக இருந்தாலும்-மும்மொழித் திட்டத்தை நிராகரிப்பதாக இருந்தாலும்-வக்பு சட்டத்தை எதிர்ப்பதாக இருந்தாலும்- தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக பாதிப்படைகின்ற மாநிலங்களை ஒன்று திரட்டுவதாக இருந்தாலும், நாம் தான் இந்திய அளவில் வலுவாக ஓங்கி குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். மாநில உரிமையின் அகில இந்திய முகமாக திமுக தான் இருக்கிறது.
எங்களை பார்த்து திசை திருப்புகிறோம் என்று புலம்ப வேண்டாம். நான் கேட்கிறேன், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் “நீட் தேர்வில் விலக்கு தருவோம்” என்று உங்களால் சொல்ல முடியுமா? “இந்தியை திணிக்க மாட்டோம்” என்று உங்களால் உறுதியளிக்க முடியுமா? “தமிழ்நாட்டிற்கு இவ்வளவு சிறப்பு நிதியை கொடுத்திருக்கிறோம்” என்று பட்டியலிட முடியுமா? “தொகுதி மறுசீரமைப்பால், தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையாது” என்று வாக்குறுதி கொடுக்க முடியுமா? நாங்கள் செய்வது திசைதிருப்புவது என்றால், இதற்கெல்லாம் தெளிவான பதிலை தமிழ்நாட்டு மக்களுக்கு ஏன் நீங்கள் கொடுக்கவில்லை.
ராமேஸ்வரத்திற்கு வந்த பிரதமர், எவ்வளவு நிதி கொடுத்தாலும் நாம் அழுகிறோம் என்று பேசிவிட்டுப் போயிருக்கிறார். “ஒன்றிய அரசிடம் கையேந்தி நிற்க, மாநிலங்கள் பிச்சைக்காரர்களா என்ன?” யார் கேட்டது, நீங்கள் கேட்டது? குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது, “ஆளுநர்கள் மூலம் தனி ராஜாங்கம் செய்கிறார்கள். எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு நிதி வழங்குவதில் பாரபட்சம் காட்டுகிறது என்று புகார் சொன்னார். இப்போது நாங்கள் கேட்டால் மட்டும் அழுகிறார்கள் என்று சொல்வது எந்த வகையில் நியாயம்? நான் கேட்பது அழுகை இல்லை; அது தமிழ்நாட்டின் உரிமை! நான் அழுது புலம்புவனும் இல்லை! ஊர்ந்து போய் யார் காலிலும் விழுகிறவனும் இல்லை.
இதற்கு காரணம் என்ன? நம்முடைய திறமையான நிர்வாகம்! இத்தனை இடர்பாடுகளை நீங்கள் உருவாக்கும்போதே நாங்கள் இந்த அளவு சிறப்பாக செயல்படுகிறோம் என்றால், எங்களை வஞ்சிக்காமல் தமிழ்நாட்டிற்கு நியாயமாக கிடைக்க வேண்டிய நிதியை கொடுத்தால், எங்கள் உரிமைகளில் தலையிடாமல் இருந்தால், எங்களால் இன்னும் பல மடங்கு சிறப்பாக செயல்பட முடியும். நீங்கள் செய்யவில்லை என்றால், நீங்கள் ஏற்படுத்துகின்ற தடைகளை எல்லாம் ஒவ்வொன்றாக சட்டபூர்வமாக உடைத்தெறிவோம். 2026-ல் நாங்கள் தான் ஆட்சி அமைப்போம் என்று அமித்ஷா நாடாளுமன்றத்தில் பேசுகிறார்.
தமிழ்நாட்டிற்கு வந்து அதை சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். நான் அவருக்கு சவாலாக ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் – டெல்லியின் ஆளுகைக்கு தமிழ்நாடு என்றைக்குமே அடிபணியாது. அப்படி ஒரு தனி குணம், ஒரு தனித் தன்மை கொண்டவர்கள் நாங்கள். மற்ற மாநிலங்களுக்குச் சென்று அங்கே உள்ள கட்சிகளை உடைத்து, ரெய்டு மூலமாக மிரட்டி, ஆட்சி அமைக்கின்ற உங்களுடைய ஃபார்முலா இங்கே தமிழ்நாட்டில் வேலைக்கு ஆகாது. நீங்கள் ஏமாற வேண்டாம். 2026ல் திராவிட மாடல் ஆட்சி தான். எங்களுடைய தமிழ்நாடு எப்போதுமே டெல்லிக்கு அவுட் ஆப் கன்ட்ரோல் தான். இங்கே இருக்கக்கூடியவர்கள் சிலரை மிரட்டி, கூட்டணி வைத்துக் கொண்ட நீங்கள் ஜெயிக்க முடியுமா? உங்கள் பரிவாரங்கள் எல்லோரையும் சேர்த்துக் கொண்டு வாருங்கள். ஒரு கை பார்ப்போம்.
ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழர்களை நாகரீகம் இல்லாதவர்கள் என்று சொல்லிவிட்டு மன்னிப்பு கேட்டாரே. அதற்கு முன்னால் இன்னொரு ஒன்றிய அமைச்சர், தமிழர்கள் வெடிகுண்டு வைப்பவர்கள் என்று சொல்லி பிறகு மன்னிப்புக் கேட்டார். நீங்கள் ஒடிசாவில் பேசினீர்களே, பூரி ஜெகந்நாத் கோயிலின் கருவூல சாவியை திருடி தமிழ்நாட்டில் வைத்திருக்கிறார்கள் என்று. தமிழ்நாட்டைச் சார்ந்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் ஒடிசா மாநில முதலமைச்சரிடம் இருக்கிறார் என்பதற்காக, ஒரு தமிழர் ஒடிசாவை ஆளாலாமா? என்று கேட்டு பிரித்தாளும் சூழ்ச்சியை நடத்தினீர்களே. அதுபோல, இங்கே செய்ய முடியாது. இங்கே துரோகக் கூட்டணியில் சேர்ந்து தமிழ்நாட்டை ஆள நினைக்கிறீர்கள். கொஞ்சம் வரலாற்றை எடுத்துப் பாருங்கள்.
சுய மரியாதையும், மானமும், வீரமும், விவேகமும், நல்லிணக்கமும் உள்ள மண் எங்கள் தமிழ் மண். ஆதிக்கத்தையும், ஆக்கிரமைப்பையும் எந்த காலத்திலும் அனுமதிக்காத மானமுள்ள மண் இந்த தமிழ் மண். தேர்தலுக்குள் அடுத்த ஓராண்டில் நீங்கள் எப்படியெல்லாம் ஏவல் அமைப்புகளை வைத்து மிரட்டுவீர்கள் என்று எங்களுக்கு தெரியும். ஏன் நாட்டு மக்களுக்கே நன்றாக தெரியும். நாங்கள் இந்த உருட்டல், மிரட்டல்களுக்கு எல்லாம் அடிபணிகின்ற அடிமைகள் அல்ல. அமித்ஷா அல்ல – எந்த ஷா-வாக இருந்தாலும் சொல்கிறேன்-இங்கே ஆளமுடியாது. இது தமிழ்நாடு. இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கும்வரை உங்கள் திட்டம் பலிக்காது. தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும். இவ்வாறு அவர் பேசினார்.
* தமிழ்நாட்டில் இருக்கின்ற சில எதிர்க்கட்சிகள், தமிழ்நாட்டுக்கே எதிரிக்கட்சிகள் மாதிரி செயல்படுகிறார்கள்.
* தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் துரோகம் இழைக்கக் கூடிய கூட்டத்துடன் உறவாடி, தமிழ்நாட்டையே அடகு வைப்பது தான் அவர்கள் எண்ணம்.
* அமித்ஷாவுக்கு நான் சவாலாக ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் – டெல்லியின் ஆளுகைக்கு தமிழ்நாடு என்றைக்குமே அடிபணியாது. அப்படி ஒரு தனி குணம், ஒரு தனித் தன்மை கொண்டவர்கள் நாங்கள்.
* ரெய்டு மூலமாக மிரட்டி, ஆட்சி அமைக்கின்ற உங்களுடைய ஃபார்முலா இங்கே தமிழ்நாட்டில் வேலைக்கு ஆகாது.
The post அமித்ஷா அல்ல எந்த ஷா வந்தாலும் ஆள முடியாது டெல்லிக்கு என்றும் தமிழ்நாடு அடிபணியாது: திருவள்ளூரில் நடந்த விழாவில் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு appeared first on Dinakaran.