சென்னை: டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6ம் தேதி முதல் 8ம் தேதி வரை நடத்தப்பட்ட சோதனை சட்டவிரோதமானது என்று அறிவிக்க கோரி டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது டாஸ்மாக் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் விக்ரம் சவுத்ரி, விகாஸ் சிங் ஆகியோர், விசாரணையை தொடங்கிய அன்றே அமலாக்கத் துறை நேரடியாக டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் சோதனை நடத்தியதின் நோக்கம் என்ன?. சோதனைக்கு வந்த நாளில் முதல் தகவல் அறிக்கையை தவிர, வேறு எந்த ஆதாரங்களும் அமலாக்கத் துறை வசம் இல்லை. மத்திய விசாரணை அமைப்புகளுக்கு தமிழக அரசு வழங்கியிருந்த ஒப்புதல் 2023ம் ஆண்டு ஜூன் மாதம் திரும்ப பெற்றதையடுத்து மாநில அரசின் அனுமதி இல்லாமல் சிபிஐ வழக்கு பதிவு செய்ய முடியாது.
எந்த வழக்கின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது என்பதை அமலாக்கத் துறை தெரிவிக்கவில்லை. இந்த முதல் தகவல் அறிக்கைகள் இல்லாமல் வாதங்களை முன்வைப்பது இயலாத காரியம். நாட்டில் உள்ள 29 மாநிலங்களில் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் ஏதேனும் ஒரு துறையை தேர்ந்தெடுத்து அமலாக்கத் துறை விசாரணை நடத்த தொடங்கினால் அதன் மீதான அபாயத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்று வாதிட்டனர். தமிழக அரசின் சார்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, அமலாக்கத் துறையின் நடவடிக்கை கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. டாஸ்மாக்கில் ஏதேனும் முறைகேடு நடந்தால் அது தொடர்பாக மாநில அரசு நடவடிக்கை எடுக்கும். தவறு செய்தவர்கள் தூக்கி எறியப்படுவார்கள் என்றார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், டாஸ்மாக் முறைகேடு விசாரணைக்கு மாநில அரசு அமலாக்கத் துறைக்கு உதவலாமே? என்று கேட்டனர்.
இதற்கு பதிலளித்த அட்வகேட் ஜெனரல், சட்டத்தை மீறி அமலாக்கத் துறை இவ்வளவு செய்த பிறகு எப்படி உதவ முடியும்?. அமலாக்கத் துறையின் சோதனை நடந்து கொண்டிருந்த போதே, டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய் மோசடி என்று ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் பேட்டியளித்தார். அதற்கு என்ன அர்த்தம் என்றார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழக காவல்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை தாக்கல் செய்யுமாறு அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர். வழக்கு மீதான விசாரணை இன்றும் நடைபெறவுள்ளது.
The post டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளை தாக்கல் செய்ய வேண்டும்: அமலாக்கத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.