தங்கம் விலை தொடர்ந்து ஜெட் வேகம் பவுன் ரூ.70 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம்: 4 நாட்களில் ரூ.4,360 வரை உயர்வு; நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து ஜெட் வேகத்தில் அதிகரித்து நேற்று பவுன் ரூ.70 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம் கண்டது. தொடர்ந்து 4 நாட்களில் மட்டும் ரூ.4,360 வரை விலை உயர்வால் நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். நேற்று தங்கம் விலை உயர்வை தான் சந்தித்தது. அதாவது, நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,770க்கும், பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு பவுன் ரூ.70,160 விற்பனையாகி புதிய உச்சத்தை பதிவு செய்தது. அதே நேரத்தில் கடந்த 4 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.4,360 வரை உயர்ந்துள்ளது. இந்த ஜெட் வேக விலை அதிகரிப்பு நகைவாங்குவோரை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

அதேபோல வெள்ளி விலையும் நேற்று உயர்ந்ததை பார்க்க முடிந்தது. வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.110க்கும், கிலோவுக்கு ரூ.2000 உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. அதனால், நேற்றைய விலையிலேயே இன்று தங்கம் விற்பனையாகும். நாளை மார்க்கெட் தொடங்கிய பிறகே தங்கம் விலையில் என்ன மாற்றம் ஏற்பட போகிறது என்பது தெரியவரும். பரஸ்பர வரி விதிப்பில் அமெரிக்காவுக்கும்-சீனாவுக்கும் இடையே மோதல் அதிகரித்ததால், பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன. இதனைதொடர்ந்து முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் பக்கம் திரும்பியது. இதனால் அதன் விலை ராக்கெட் வேகத்தில் கிடுகிடுவென உயர தொடங்கியுள்ளதாக நகை வியாபாரிகள் கூறினர்.

The post தங்கம் விலை தொடர்ந்து ஜெட் வேகம் பவுன் ரூ.70 ஆயிரத்தை கடந்து புதிய உச்சம்: 4 நாட்களில் ரூ.4,360 வரை உயர்வு; நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: