தமிழ்நாடு அரசின் வழக்கில் குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகள்..!!

டெல்லி: தமிழ்நாடு அரசின் வழக்கில் குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு தன்னுடைய சிறப்பு அதிகாரத்தின் கீழ் உச்சநீதிமன்றமே ஒப்புதல் அளித்து தீர்ப்பு வழங்கியது. 415 பக்க தீர்ப்பு நகலை அனைத்து மாநில ஆளுநர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள உச்ச நீதிமன்றம் தீர்ப்பு நகலை ஏப்ரல் 11 ஆம் தேதி நள்ளிரவில் இணையதளத்திலும் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் வழக்கில் குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவுகளை வெளியிட்டுள்ளது. அதில்,

*மாநில அரசு நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பும் மசோதாக்களை, அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் பட்சத்தில் குடியரசுத் தலைவர் அதன் மீது 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்.

*ஒருவேளை முடிவெடுக்க தாமதம் ஆனால், அதற்கான உரிய காரணத்தை மாநில அரசுக்கு, குடியரசுத் தலைவர் தெரிவிக்க வேண்டும். காலக்கெடுவிற்குள் குடியரசுத் தலைவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் அவருக்கு எதிராக மாநிலங்கள் நீதிமன்றத்தை நாட முடியும்.

*மசோதா மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டாலும் குடியரசுத் தலைவருக்கு எதிராக நீதிமன்றத்தில் முறையீடு செய்ய மாநிலங்களுக்கு உரிமை உண்டு.

*ஆளுநரைப் போலவே, குடியரசுத் தலைவரும் கூட மசோதாக்கள் மீது காலவரையின்றி முடிவெடுக்காமல் ‘வீட்டோ’ அதிகாரத்தை பயன்படுத்த முடியாது.

*மாநிலங்களும் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும். குடியரசுத் தலைவர் எழுப்பும் கேள்விகளுக்கு பதில்கள் வழங்க வேண்டும். மேலும், மசோதா மீது ஒன்றிய அரசு அளித்த பரிந்துரைகளை மாநில அரசு விரைந்து பரிசீலிக்க வேண்டும்.

*ஒருவேளை மாநில அரசின் மசோதா அரசியல் சாசனத்திற்கு எதிராக இருக்கிறது என குடியரசுத் தலைவர் கருதினால், அவர் உச்ச நீதிமன்றத்திடம் ஆலோசனை கேட்கலாம்.

 

The post தமிழ்நாடு அரசின் வழக்கில் குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகள்..!! appeared first on Dinakaran.

Related Stories: