காளையார்கோவிலில் பழங்கால இரும்பு, செம்பு பொருட்கள் கண்டெடுப்பு

காளையார்கோவில் : காளையார்கோவில் பாண்டியன் கோட்டையில் பழமையான பாசிமணி, இரும்பு மற்றும் செம்பாலான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் புறநானூற்றுச் சிறப்புமிக்க பாண்டியன் கோட்டை மேட்டுப்பகுதியில் சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவனர் புலவர் காளிராசா, செயலர் நரசிம்மன், கள ஆய்வாளர் சரவணன் ஆகியோர் மேற்கொண்ட மேற்பரப்பு கள ஆய்வில், பழமையான பளிங்கு கல்லாலான பாசிமணி மற்றும் செம்பினாலான கைப்பிடியோடு இரும்பால் செய்யப்பட்டுள்ள பொருள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக்குழு நிறுவநர் புலவர் காளிராசா, செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, ‘‘பளிங்கு கல்லாலான கண்ணாடி போன்ற பாசி மணி கண்டெடுக்கப்பட்டுள்ளது. இம்மணியின் நடுவில் கோர்க்க நேர்த்தியாக துளையிடப்பட்டு வட்ட வடிவில் தட்டையாக வடிவமைக்கப்பட்டுள்ளது. செம்பினால் கைப்பிடி செய்யப்பட்டு உள்ளே இரும்பு நுழைக்கப்பட்ட வேலைப்பாடுடைய பொருள் ஒன்றும் கிடைத்துள்ளது.

இது சிறிய வடிவிலான இரும்பால் செய்யப்பட்ட கத்தி அல்லது குறுவாள் என ஏதாவது ஒரு பொருளாக இருக்கலாம். ஆனாலும் இரும்பும், செம்பும் பன்னெடுங்காலமாக நமது பயன்பாட்டில் இருப்பதை இவ்வாறான தொன்மையான பொருட்கள் நமக்கு வெளிப்படுத்துகின்றன’’ என்றார்.

The post காளையார்கோவிலில் பழங்கால இரும்பு, செம்பு பொருட்கள் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Related Stories: