கேரள கழிவுகள் தமிழ்நாட்டின் கடல் பகுதிகளில் கொட்டப்படுகிறதா?: தகவல் சரிப்பார்ப்பகம் விளக்கம்

சென்னை: கேரளாவின் கழிவுகள் படகுகள் மூலம் தமிழக கடலில் கொட்டப்படுவதாக பரவும் வீடியோ வதந்தி என தமிழ்நாடு அரசின் தகவல் சரிப்பார்ப்பகம் தெரிவித்துள்ளது. கேரளாவில் இருந்து கோழி கழிவுகள், மாட்டு இறைச்சி கழிவுகள் ஆகியவற்றை சாக்கு மூட்டைகளில் கட்டி மீன் கொட்டுவதை போன்று பல வாகனங்களில் ஏற்றி வந்து தமிழக பகுதிகளில் கொட்டப்படுகின்றன. நெல்லையில் மருத்துவ கழிவுகள் சில மாதங்களுக்கு முன்பு கொட்டப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் மருத்துவ கழிவுகளை முழுமையாக அகற்றுமாறு கேரள அரசுக்கு உத்தரவிட்டது. மேலும் காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து 5க்கும் மேற்பட்டோரை கைது செய்திருந்தனர்.

இந்த சம்பவம் குறித்த சர்ச்சை அடங்குவதற்குள் கேரளாவில் இருந்து கடல் மார்க்கமாக படகில் வந்து தமிழ்நாட்டில் கழிவுகளை திறந்து விடுவதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர். தமிழ்நாடு என்ன கேரளாவின் குப்பை தொட்டியா?. தமிழக கடலில் படகில் இருந்து கழிவுகளைத் திறந்து விடும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதுகுறித்து தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிப்பார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது; “இது தமிழகத்தில் நடந்த சம்பவம் அல்ல. கடலில் கழிவுகள் கலப்பது போன்று உருவாக்கப்பட்ட இந்த வீடியோ செயற்கை நுண்ணறிவின் (AI) மூலம் உருவாக்கப்பட்டது. கடலில் கழிவுகளைக் கலப்பது தொடர்பாக உருவாக்கப்பட்ட இக்காணொளி AI Aboutine எனும் யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ போலவே செயற்கை நுண்ணறிவின் மூலம் உருவாக்கப்பட்ட பல்வேறு வீடியோக்களையும் அந்த வலைதளத்தில் பதிவேற்றி இருக்கிறார்கள். எனவே வதந்தியை பரப்பாதீர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கேரள கழிவுகள் தமிழ்நாட்டின் கடல் பகுதிகளில் கொட்டப்படுகிறதா?: தகவல் சரிப்பார்ப்பகம் விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: