பொள்ளாச்சி பாலியல் வழக்கு; போலீஸ் எஸ்ஐ, அரசு மருத்துவர் ஏப்.15ல் ஆஜராக கோர்ட் உத்தரவு

கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் போலீஸ் எஸ்.ஐ, அரசு மருத்துவர் ஏப்.15ம் தேதி நேரில் ஆஜராக சிபிஐ கோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 8க்கும் ேமற்பட்ட இளம்பெண்களை வீடியோ எடுத்து, பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக, பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் புகார் அளித்ததன்பேரில், பொள்ளாச்சி போலீசார் முதலில் விசாரணை நடத்தினர். பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, அதன்பின் சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டது.

இவ்வழக்கில், பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு (25), சபரிராஜன் (25), வசந்தகுமார் (27), சதீஷ் (28), மணிவண்ணன் (25) ஆகிய 5 பேர் கடந்த 2019ம் ஆண்டும், ஹேரேன் பால் (29), பாபு என்கிற பைக் பாபு (34), அருளானந்தம் (34), அருண்குமார் ஆகிய 4 பேர் கடந்த 2021ம் ஆண்டும் கைது செய்யப்பட்டனர். கைதான 9 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீதான வழக்கு விசாரணை கோவை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில், 50க்கும் மேற்பட்ட அரசுத்தரப்பு சாட்சியங்கள், சுமார் 200 ஆவணங்கள், 40 மின்னணு தரவுகள் உள்பட பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பொருட்களும் விசாரணைக்கு சேர்க்கப்பட்டு, நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. இந்த வழக்கில், பாதிக்கப்பட்டவர்கள் 8 பேர், விசாரணையின்போது, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சாட்சியம் அளித்துள்ளனர். இவ்வழக்கில், ஒவ்வொரு வாய்தாவின்போதும், குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் சேலம் சிறையில் இருந்தபடியே வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். தற்போது இவ்வழக்கில், அரசு தரப்பு சாட்சியங்கள் நிறைவுபெற்றுள்ளன.

இதையடுத்து, கைதான 9 பேரிடம், சட்ட விதிகள் 313-ன் கீழ் கேள்விகள் கேட்பதற்கு கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, திருநாவுக்கரசு உள்பட 9 பேரும் கடந்த 5ம் தேதி சேலத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு, கோவை சிபிஐ நீதிமன்றத்தில், நீதிபதி ஆர்.நந்தினிதேவி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர், வழக்கு விசாரணை ஏப்ரல் 9ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. அதன்படி, இவ்வழக்கு விசாரணை நேற்று மீண்டும் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.நந்தினிதேவி, வரும் 15ம் தேதிக்கு வழக்கு விசாரணையை தள்ளிவைத்தார். அன்றையதினம் பொள்ளாச்சி டவுன் போலீஸ் எஸ்ஐ மற்றும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவ அதிகாரி (ஆர்.எம்.ஓ) ஆகியோர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தார்.

The post பொள்ளாச்சி பாலியல் வழக்கு; போலீஸ் எஸ்ஐ, அரசு மருத்துவர் ஏப்.15ல் ஆஜராக கோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: