திருத்தணி: திருத்தணி காந்தி நகரில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 13ம் தேதி தீமிதி திருவிழா நடக்க உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான அர்ஜுனன் தபசு நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. இதற்காக அர்ஜுனன் வேடமிட்ட தெருக்கூத்து கலைஞர், சிவ பெருமானிடம் வரம் வேண்டி தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் நடந்தது. இதில் குழந்தை வரம் வேண்டி பெண்கள் தபசு மரத்தடியில் வழிபட்டனர்.
அப்போது அர்ஜுனன் வேடம் தரித்த கட்டைக்கூத்து கலைஞர், சிவபெருமானை நோக்கி பாடல்கள் பாடியவாறு மேலே இருந்து எலுமிச்சை பழங்கள், குங்குமம், விபூதி மற்றும் பூக்கள் உள்ளிட்ட பொருட்களை பக்தர்கள் மீது வீசினார். அதை ஆர்வமுடன் பெண்கள், தங்கள் மடியில் தாங்கியவாறு பெற்று கொண்டனர். இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு ரசித்தனர்.
The post திருத்தணியில் அர்ஜுனன் தபசு நிகழ்ச்சி appeared first on Dinakaran.