கலசபாக்கம், மார்ச் 30: தென் கைலாயம் என அழைக்கப்படும் பர்வதமலை கலசபாக்கம் ஒன்றியம் தென் மகாதேவமங்கலம் கிராமத்தில் 4560 அடி உயரத்தில் உள்ளது. இங்கு சித்தர்களும், ரிஷிகளும் முனிவர்களும், இன்றும் காட்சியளிக்கின்றனர். 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற மல்லிகா அர்ஜுனேஸ்வரர் பிரம்மராம்பிகை அம்மனை தரிசனம் செய்ய பவுர்ணமி அமாவாசை தினங்களில் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அதேபோல் வார இறுதி நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் இருந்த வண்ணம் உள்ளது.
தற்போது அந்த நிலை மாறி தினந்தோறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று பங்குனி மாத அமாவாசை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக நேற்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்களுக்கு மலை அடிவாரத்தில் உள்ள வீரபத்திரன் கோயிலில் பக்தர்களின் கைகளில் தைரியத்தையும் ஆரோக்கியத்தையும் வழங்கிட சக்தி கயிறு கட்டப்பட்டது. மேலும் மலை அடிவாரத்தில் வனத்துறை அதிகாரிகள் பக்தர்களை பரிசோதனை செய்து மலையேற அனுமதித்தனர். பங்குனி மாத அமாவாசையையொட்டி மல்லிகா அர்ஜுனேஸ்வரர் பிரம்மராம்பிகை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
The post பர்வத மலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல் பங்குனி மாத அமாவாசையையொட்டி appeared first on Dinakaran.