சென்னை, மார்ச் 28: சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இன்று மற்றும் ஏப்ரல் 5, 11, 25, 30 மற்றும் மே 12ம் தேதி ஆகிய நாட்களில் சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளன. இப்போட்டிகள் நடைபெறுவதை முன்னிட்டு போட்டி நடைபெறும் நாட்களில் மாலை 5 மணி முதல் 11 மணி வரையிலும், பின்வருமாறு வாகன நிறுத்த ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. வாகன நிறுத்தத்திற்கான ஏற்பாடுகள் பொதுமக்கள் எம்ஆர்டிஎஸ், உள்ளூர் ரயில் அல்லது மெட்ரோ ரயில் அரசு எஸ்டேட் மெட்ரோ நிலையம் மூலமாக சேப்பாக்கம் நிலையம் வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். வாகன நிறுத்தத்திற்கான அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் வாகன அனுமதி அட்டையில் குறிப்பிட்டுள்ளபடி நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்கப்படுகிறார்கள். இவ்வாகன நிறுத்த இடத்திலிருந்து கிரிக்கெட் மைதானம் 200 மீட்டர் நடந்து செல்லும் தொலைவில் உள்ளன.
அனுமதி அட்டை வாங்காத வாகனங்கள் போட்டியை காண சொந்த வாகனத்தில் வரும் நபர்கள் கதீட்ரல் சாலை மற்றும் ஆர்.கே.சாலை வழியாக காமராஐர் சாலை சென்று மெரினா கடற்கரை சாலை அடைந்து மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு, பின்னர் சுரங்கப்பாதைகள் பயன்படுத்தி நடைபயணமாக சென்று மைதானத்தை அடையலாம். இவ்வாகன நிறுத்த இடத்திலிருந்து கிரிக்கெட் மைதானம் 500 மீட்டர் நடந்து செல்லும் தொலைவில் உள்ளன. போட்டியை காண டாக்சிகள், ஆட்டோ ரிக்ஷக்கள் போன்ற வணிக வாகனத்தில் வரும் நபர்களுக்கு அண்ணாசாலையிலிருந்து வாலஜா சாலைக்குள் சென்று மைதானத்திற்கு அருகில் இறக்கிவிடப்பட்டு, மேலும் வாகனங்கள் சிவானந்தா சாலையில் நிறுத்த அனுமதிக்கப்படும்.
வாலாஜா சாலையில் கூடுதலாக மாநகர பேருந்துகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்க அனுமதிக்கப்படாது. அவ்வாகனங்கள் சுவாமி சிவானந்தா சாலையில் மட்டுமே பயணிகளை ஏற்றிச்செல்ல இறக்கிவிடுவதற்கு அனுமதிக்கப்படும். பொதுமக்கள் பிரஸ் கிளப் சாலை வழியாக சென்று கிரிக்கெட் மைதானத்தை அடையலாம். பேருந்து நிறுத்த இடத்திலிருந்து கிரிக்கெட் மைதானம் 300 மீட்டர் நடந்து செல்லும் தொலைவில் உள்ளன. மேலும் விக்டோரியா ஹாஸ்டல் சாலை செல்ல பாரதி சாலை வழியாக மட்டுமே அனுமதிக்கப்படும். வாலாஜா சாலையில் இருந்து செல்ல அனுமதி இல்லை. பெல்ஸ் சாலை ஒரு வழிப்பாதையாக இயக்கப்படும். பாரதி சாலையிலிருந்து பெல்ஸ் சாலை செல்ல அனுமதிக்கப்படும். வாலாஜா சாலையிலிருந்து செல்ல அனுமதி இல்லை.
பாரதி சாலை ரத்னா கபேவிலிருந்து காமராஜர் சாலை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் பெல்ஸ் சாலை மற்றும் வாலாஜா சாலையில் திருப்பிவிடப்படும். சுவாமி சிவானந்த சாலை வடக்கு திசையில் இருந்து வரும் பார்வையாளர்கள் தங்கள் வாகனங்களை சுவாமி சிவானந்தா சாலையில், சாலையோரப் பகுதியில் நிறுத்த வேண்டும். மெரினா சர்வீஸ் சாலை காமராஜர் சாலை மற்றும் அண்ணா சாலையிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் தங்கள் வாகனங்களை நிறுத்த வேண்டும். வாலாஜா சாலை, பெல்ஸ் சாலை, பாரதி சாலை காமராஜர் சாலை சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறையினர் தற்காலிகமாக இந்த பகுதியில் வாகனங்களை நிறுத்துவதற்கு தடைசெய்யப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
The post சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி காரணமாக இன்று போக்குவரத்து மாற்றம்: காவல்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.