சேந்தமங்கலம் : நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியம், கண்ணூர்பட்டி ஊராட்சி கோவிந்தம்பாளையம் கிராமத்தில், நேற்று முன்தினம் இரவு, வயது முதிர்வு காரணமாக மூதாட்டி ஒருவர் இறந்தார்.
அவரை அடக்கம் செய்வதற்காக, நேற்று காலை அவரது உறவினர்கள் கோவிந்தம்பாளையத்தில் உள்ள மயானத்திற்கு சென்று, குழி தோண்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மயானத்தின் ஒரு பகுதியில், எரிந்த நிலையில் 6 மண்டை ஓடுகள் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து ஊர் மக்களுக்கு தகவல் பரவியது. பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தபோது, எரிந்த மண்டை ஓடுகள் அருகில் பூஜை தட்டு, மாந்திரீக செப்பு தகடுகள், செருப்பு உள்ளிட்டவை எரிக்கப்பட்டு கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த விஏஓ கலைச்செல்வி, புதுச்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் ஏஎஸ்பி ஆகாஷ் ஜோஷி, இன்ஸ்பெக்டர் கோமதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு மயானத்தில் மந்திரவாதிகள் மாந்திரீக பூஜை நடத்தி இருப்பது தெரியவந்தது.
மண்டை ஓடுகள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து, சேலத்தில் இருந்து தடயவியல் பிரிவு போலீசார் வரவழைக்கப்பட்டு, எரிந்த நிலையில் கிடந்த மண்டை ஓடுகளில் இருந்து தடயங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.
மேலும், மயானம் செல்லும் வழியில் உள்ள குடியிருப்புகளில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். அதில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருக்கிறதா எனவும், உள்ளூர் மக்கள் தோஷம் கழிப்பதற்காக, மந்திரவாதிகளை அழைத்து வந்து இது போன்ற மயான பூஜையில் ஈடுபட்டனரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post புதுச்சத்திரம் அருகே பரபரப்பு மண்டை ஓடுகளுடன் மயானத்தில் மாந்திரீக பூஜை செய்த மர்ம கும்பல் appeared first on Dinakaran.