கடலூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் ஒரே நாளில் குவிந்த 994 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு

*நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

கடலூர் : கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 994 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.

தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவதற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் திங்கள்கிழமைதோறும் நடைபெற்று வருகிறது.

இதுபோல் நடந்த நேற்றைய கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 994 மனுக்கள் பெறப்பட்டன. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.12,000 மதிப்பீட்டில் காலிபர் சாதனங்களையும், தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம், உலக நுகர்வோர் பாதுகாப்பு தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற 12 மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வழங்கினார்.

தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கு ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று வழங்குவதற்கு தலா ரூ.60 லட்சம் வீதம் மொத்தம் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் 2 நடமாடும் விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை ஊர்தியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) வெங்கடேசன், உதவி ஆணையர் (கலால்) சந்திரகுமார், தனித்துணை ஆட்சியர் தங்கமணி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

The post கடலூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் ஒரே நாளில் குவிந்த 994 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: