2032ம் ஆண்டிற்குள் கடல்சார் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் 22.8 சதவீதம் வளர்ச்சியடையும்: நிதிஆயோக் உறுப்பினர் விஜய்குமார் சரஸ்வத் தகவல்

சென்னை: 2032ம் ஆண்டிற்குள் கடல்சார் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் 22.8 சதவீதம் வளர்ச்சியடையும் என நிதிஆயோக் உறுப்பினர் விஜய்குமார் சரஸ்வத் கூறினார். சென்னையிலுள்ள தேசிய கடல்வளத்துறை தொழில்நுட்ப கழகத்தில் கடல்சார் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் முன்னேற்றங்கள் எனும் தலைப்பில் 2 நாள் சர்வதேச கருத்தரங்கை நிதி ஆயோக் உறுப்பினரும், பாதுகாப்புத் துறை விஞ்ஞானியுமான விஜய் குமார் சரஸ்வத் நேற்று தொடங்கி வைத்தார். இந்த கருத்தரங்கில் தொழில்நுட்ப பரிமாற்ற முறையில் தயாரிக்கப்பட்ட கடல் நீரில் எரியும் லாந்தன் விளக்குகள் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவுகள் நிர்வாகத்தினருக்கும் கடலில் கப்பல்களுக்கு வழிகாட்டும் மிதக்கும் வழிகாட்டி அமைப்பை காமராஜர் துறைமுகத்துக்கும் சரஸ்வத் வழங்கினார். ரோஷினி என்ற இந்த கடல் நீரில் எரியும் லாந்தன் விளக்கை சென்னை தேசிய கடல்வளத்துறை தொழில்நுட்ப கழகத்தின் விஞ்ஞானி பூர்ணிமா ஜலிகல் கண்டுபிடித்துள்ளார்.

கருத்தரங்கில் நிதிஆயோக் உறுப்பினர் விஜய்குமார் சரஸ்வத் பேசியதாவது: இந்தியா, 7,500 கிலோ மீட்டருக்கும் அதிக நீளமுள்ள கடற்கரையை கொண்டுள்ளது. சிறப்புநிலை பொருளாதார மண்டலம் 2.02 மில்லியன் சதுர கிலோ மீட்டருக்கு பரந்து விரிந்துள்ளது. இவை நாட்டின் ஒரு நீலப்பொருளாதாரத்தில் முக்கியப் பங்காற்றுகிறது. இந்தியா, கடலோர காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி செய்து வருகிறது. வருங்காலத்தில் மிதக்கும் சோலார் (சூரியஒளி) மின்னாற்றல் தயாரிப்பு, கடல்அலைகள் மூலம் மின் உற்பத்தி ஆகியவை சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உகந்தவையாக திகழும். மேலும் கார்பன் உமிழ்வு மிகவும் குறைவாக இருக்கும்.

இத்துறையில் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும். 2023-2032 காலகட்டத்தில் இத்துறை 22.8 சதவீதம் வளர்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியா 12.4 கிகா வாட் கடலலை மின்னுற்பத்தியுடன் சேர்த்து 54 கிகா வாட் பெருங்கடல் மின் உற்பத்தி செய்யும் திறனுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் தேசிய கடல்வளத்துறை தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் பாலாஜி ராமகிருஷ்ணன மற்றும் ஆற்றல், நன்னீர் துறைத்தலைவர் பூரணிமா ஐலிகல், இந்தியா மற்றும் உலக நாடுகளின் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

The post 2032ம் ஆண்டிற்குள் கடல்சார் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் 22.8 சதவீதம் வளர்ச்சியடையும்: நிதிஆயோக் உறுப்பினர் விஜய்குமார் சரஸ்வத் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: