பிரபல மகளிர் கல்லூரியின் 3வது மாடியில் இருந்து குதித்த மாணவி சிகிச்சை பலனின்றி பலி: சகோதரி இறந்த துக்கத்தால் விபரீத முடிவு

சென்னை: கோபாலபுரத்தில் உள்ள பிரபல மகளிர் கல்லூரியின் 3வது மாடியில் இருந்து குதித்த கல்லூரி மாணவி ஒருவர், 6 நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். தனது சகோதரி மரணத்தில் ஏற்பட்ட மன அழுத்ததால் விபரீத முடிவுக்கு சென்றது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னை கோபாலபுரத்தில் பிரபல மகளிர் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த அஷியா (19) என்பவர் பிபிஏ 2ம் ஆண்டு படித்து வந்தார். இந்த கல்லூரியில் ஆண்டு இறுதி தேர்வு தற்போது நடந்து வருவதாக கூறப்படுகிறது.

அதன்படி கடந்த 12ம் தேதி கல்லூரிக்கு வந்த அஷியா, தனக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு அறையில் தேர்வு எழுதி கொண்டிருந்தார். அப்போது திடீரென தேர்வை பாதியில் நிறுத்திய அவர், அறையில் இருந்து வெளியே வந்து யாரும் எதிர்பார்க்காத நிலையில் கட்டிடத்தின் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் மாணவிக்கு இடுப்பு எலும்பு, கை எலும்பு முறிவு ஏற்பட்டு வலியால் துடித்தார். உடனே கல்லூரி நிர்வாகம் மாணவியை மீட்டு மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு கடந்த 6 நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வந்த மாணவி நேற்று காலை உயிரிழந்தார். தகவலறிந்து வந்த தேனாம்பேட்டை போலீசார், மாணவி தற்கொலை முயற்சி குறித்து விசாரணை நடத்தினர். அப்போது, மாணவியின் சகோதரி 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் மன அழுத்தம் காரணமாக மாணவி சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. அதே நேரம் கடந்த வாரம் தனது சகோதரியின் 2ம் ஆண்டு நினைவு நாள் வந்துள்ளது. இதனால் கடும் மன உளைச்சலில் இருந்து வந்த அவர், சம்பவத்தன்று தேர்வு எழுதும் போது கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

The post பிரபல மகளிர் கல்லூரியின் 3வது மாடியில் இருந்து குதித்த மாணவி சிகிச்சை பலனின்றி பலி: சகோதரி இறந்த துக்கத்தால் விபரீத முடிவு appeared first on Dinakaran.

Related Stories: