புதுச்சேரியில் கலைஞர் பெயர் சூட்டப்படும்; மொழிக்காக பாடுபட்ட தலைவர் கலைஞர்: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு!!

புதுச்சேரி: புதுச்சேரியில் ஒரு நல்ல இடத்துக்கு கலைஞர் பெயர் சூட்டப்படும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் 15வது சட்டசபையின் 6-வது பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 10ம் தேதி தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் கைலாஷ்நாதன் உரையை வாசித்தார். இதையடுத்து, மாா்ச் 12ம் தேதி முதல்வா் ரங்கசாமி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தாா். மாா்ச் 11 மற்றும் 13ம் தேதிகளில் ஆளுநா் உரை மீதான நன்றி தெரிவிக்கும் விவாதம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் விடுமுறை என்பதால் சட்டப்பேரவைக் கூட்டம் மாா்ச் 17ம் தேதி மீண்டும் தொடங்கும் என பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், விடுமுறைக்கு பிறகு புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர் மீண்டும் தொடங்கியது. புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று உறுப்பினர்களின் கேள்வி, பதிலும் அதனைத்தொடர்ந்து பட்ஜெட் மீதான பொது விவாதமும் நடைபெற்று வருகிறது. புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனது வைத்தால்தான் முடியும் என புதுச்சேரி சட்டப்பேரவையில் உறுப்பினர் கேள்விக்கு முதலமைச்சர் ரங்கசாமி பதில் அளித்துள்ளார். மேலும், புதுச்சேரியில் ஒரு நல்ல இடத்துக்கு கலைஞர் பெயர் சூட்டப்படும். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மதிப்புமிக்க தலைவர். மொழிக்காக பாடுபட்ட தலைவர் கலைஞர்; போற்றப்படக்கூடிய தலைவர். உச்சநீதிமன்ற அறிவுறுத்தல் காரணமாக பொது இடத்தில் கலைஞருக்கு சிலை வைக்க முடியவில்லை என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

The post புதுச்சேரியில் கலைஞர் பெயர் சூட்டப்படும்; மொழிக்காக பாடுபட்ட தலைவர் கலைஞர்: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: