டெல்லியில் வகுப்பறை கட்டியதில் ஊழல்; சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி: ஜனாதிபதி உத்தரவு

புதுடெல்லி: டெல்லி அரசுப் பள்ளிகளில் வகுப்பறைகள் கட்டியதில் ரூ.1,300 கோடி ஊழல் செய்ததாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்கள் மனிஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தர் ஜெயின் மீது வழக்குப்பதிவு செய்ய ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டில், டெல்லி அரசின் விஜிலென்ஸ் இயக்குநரகம் இதுகுறித்த விசாரணைக்கு பரிந்துரைத்து, தலைமைச் செயலாளரிடம் அறிக்கை சமர்ப்பித்தது. அதன் அடிப்படையில் தற்போது இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுதொடர்பாக ஒன்றிய விஜிலென்ஸ் கமிஷன் கடந்த 2020 பிப்ரவரி 17 அன்று வெளியிட்ட அறிக்கையில், ‘டெல்லி அரசுப் பள்ளிகளில் பொதுப்பணித் துறையால் 2,400 க்கும் மேற்பட்ட வகுப்பறைகள் கட்டப்பட்டதில் முறைகேடுகள் நடந்துள்ளன’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. டெல்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான அமைச்சரவையில் சிசோடியா துணை முதல்வராகவும், கல்வி அமைச்சராகவும், சத்யேந்தர் ஜெயின் பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post டெல்லியில் வகுப்பறை கட்டியதில் ஊழல்; சிசோடியா, சத்யேந்தர் ஜெயின் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி: ஜனாதிபதி உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: