ஆரணி, மார்ச் 12: ஆரணி அடுத்த பையூரில் காணாமல் போன டீக்கடைக்காரர் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த பையூர் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் மூர்த்தி(58), டீக்கடை உரிமையாளர் இவரது மனைவி கவுரி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் மூர்த்தி கடந்த 7ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து குடும்பத்தினர் ஆரணி தாலுகா போலீசில் மறுநாள் (8ம்தேதி) புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு மூர்த்தியை தேடி வந்தனர்.
பையூர் கமண்டல நாகநதி ஆற்றில் ஒரு ஆண் சடலம் மிதப்பதாக ஆரணி தாலுகா போலீசாருக்கு நேற்றுமுன்தினம் தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்று போலீசார், சடலத்தை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், கடந்த 7ம்தேதி காணாமல் போன டீக்கடைக்காரர் மூர்த்தி என தெரியவந்தது. இதுகுறித்து அவரது மகன் வினோத்குமார்(28) கொடுத்த புகாரின்பேரில் ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மூர்த்தி எப்படி இறந்தார் என விசாரித்து வருகின்றனர்.
The post ஆரணி அடுத்த பையூரில் மாயமான டீக்கடைக்காரர் ஆற்றில் சடலமாக மீட்பு appeared first on Dinakaran.