சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் ஆகாய தாமரைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை


ஈரோடு: சுகாதார சீட்டை ஏற்படுத்தி வரும் ஆகாய தாமரைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு, திண்டலில் இருந்து வில்லரசம்பட்டி நால்ரோடு செல்லும் பிரதான சாலையில், மாருதி நகர் அருகே செங்கோடம்பள்ளம் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இருபுறமும் கான்கிரீட் தடுப்புகள் கட்டப்பட்டு, வாய்க்காலின் ஓரம் தார்சாலை வசதியும் அமைக்கப்பட்டது. இந்த வாய்க்காலில், தனியார் பொறியியல் கல்லூரியின் பின்புறம் அமைந்துள்ள பகுதியில் சிறிய செக் டேம் ஒன்றும் கட்டப்பட்டது.

இந்த செக் டேம்மிலிருந்து, வாய்க்காலின் நீர் வரத்து பகுதியான காரப்பாறை வரையிலான சுமார் 2 கிலோமீட்டர் தூரத்துக்கு முழுவதும் தண்ணீரை மறைத்தபடி, ஆகாய தாமரைகள் பரவியுள்ளன. இதனால், வாய்க்காலில் தண்ணீர் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், அப்பகுதியில் கடும் துர்நாற்றமும் வீசுகிறது. மேலும், கொசு உற்பத்தியும் அதிகரித்து பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, வாய்க்காலில் படர்ந்திருக்கும் ஆகாய தாமரைகள் முழுவதையும் அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் ஆகாய தாமரைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: