வடமதுரை ஆதிகேசவ பெருமாள் கோயிலில் ராஜராஜன், ராஜேந்திர சோழன் கல்வெட்டுகள் கண்டெடுப்பு

பெரியபாளையம்: பெரியபாளையம் அடுத்த வடமதுரையில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோயிலில் ராஜராஜன் மற்றும் ராஜேந்திர சோழர்களின் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பெரியபாளையம் அடுத்த வடமதுரையில் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட ஆதிகேசவ பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலில் திருவள்ளூர் மாவட்ட தொல்லியல் துறை அலுவலர் லோகநாதன் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த கோயிலில் இருந்து ஒரு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டு ராஜேந்திர சோழனின் ஆட்சி காலத்திற்கு உட்பட்டது.

மேலும் அந்த, கல்வெட்டின் இருபுறமும் ராஜேந்திர சோழனின் தமிழ் எழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ளது. இதில் ராஜேந்திர சோழனின் 25வது ஆண்டு ஆட்சியில் நம்பிராட்டி அம்மையாருக்கு இறையிலியாக 5 குழி நிலம் கொடுக்கப்பட்டுள்ளதும், பிரம்மதேயமாக, சதுர்வேத மங்களமாக அளிக்கப்பட்டதும் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர்அர்த்த மண்டபத்தில் ராஜராஜ சோழனின் கல்வெட்டு ஒன்றும் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், அங்குள்ள சிவன் கோயில் மேல்விதானத்தில் சோழர் காலத்து படைபிரிவினரின் கல்வெட்டு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்த தொல்லியல் துறை அலுவலர் லோகநாதன் கூறுகையில், இந்த கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் இந்த இடம் சோழர் காலத்தில் சிறப்புற்று விளங்கியது தெரிய வந்துள்ளது என்றார்.

The post வடமதுரை ஆதிகேசவ பெருமாள் கோயிலில் ராஜராஜன், ராஜேந்திர சோழன் கல்வெட்டுகள் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Related Stories: