தாக்குதல் வழக்கில் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து சிபிஐ அலுவலகம் முற்றுகை: ஐகோர்ட் ஆவின் கேட் அருகே வழக்கறிஞர்கள் கைது

சென்னை: உயர் நீதிமன்ற வளாகத்தில் கடந்த 2009ல் வழக்கறிஞர்கள் மீது போலீசார் கடுமையாக தாக்குதல் நடத்திய வழக்கில் சிபிஐ இதுவரை உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து சிபிஐ அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்திய உயர் நீதிமன்ற வழக்கறிஞர்களை போலீசார் கைது செய்தனர்.சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்குள் கடந்த 2009 பிப்ரவரி 19ம் தேதி நுழைந்த போலீசார், வழக்கறிஞர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தினர். வழக்கறிஞர்களின் வாகனங்களையும் போலீசார் அடித்து சேதப்படுத்தினர். போலீசார் தாக்குதலில் ஏராளமான வழக்கறிஞர்கள் படுகாயமடைந்தனர். நீதிபதிகளும், பெண்களும் தாக்கப்பட்டனர்.

இதையடுத்து இந்த தாக்குதல் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், 15 ஆண்டுகளாகியும் இதுவரை சிபிஐ முழுமையான நடவடிக்கை எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட போலீசார் மீது வழக்கு பதிவு செய்யவில்லை. இதைக் கண்டித்து ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 19ம் தேதி உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கண்டன ஆர்பாட்டம், நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு சிபிஐ அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டதை அடுத்து, நேற்று காலை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன் தலைமையில் துணை தலைவர் அறிவழகன், பொருளாளர் ஜி.ராஜேஷ் உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள் ஆவின் கேட் முன்பு திரண்டனர்.

சிபிஐயை கண்டித்து கோஷம் எழுப்பியபடி உயர் நீதிமன்ற வளாகத்தில் பேரணியாக வந்து ஆவின்கேட் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தி சிபிஐ அலுவலகம் நோக்கி சென்றனர். அவர்களை ஆவின் கேட் அருகே போலீசார் கைது செய்தனர். போராட்டத்தால் என்எஸ்சி போஸ் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கைது செய்யப்பட்ட வழக்கறிஞர்களை ராயபுரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைத்து மாலை 4 மணிக்கு அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

The post தாக்குதல் வழக்கில் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து சிபிஐ அலுவலகம் முற்றுகை: ஐகோர்ட் ஆவின் கேட் அருகே வழக்கறிஞர்கள் கைது appeared first on Dinakaran.

Related Stories: