அதன்படி அலிபிரியிலிருந்து திருமலைக்கு நடந்து செல்லும் பக்தர்கள் வழக்கம்போல் தனியாகவோ, குழுவாகவோ அதிகாலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அனுமதிக்கப்படுகிறார்கள். அதன்பிறகு பக்தர்கள் குழுக்களாக கூட்டமாக அனுப்பி வைக்கப்படுகின்றனர். ஒவ்வொரு குழுவிலும் 70 முதல் 100 பக்தர்கள் இருக்கவேண்டும் என்பதை விஜிலென்ஸ் குழு கண்காணித்து வருகிறது. மேலும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பிற்பகல் முதல் அனுமதி இல்லை. அலிபிரி நடைபாதை இரவு 10 மணிக்கு மூடப்பட்ட நிலையில் இனிமேல் 9.30 மணிக்கே மூடப்படும்.
கடந்த காலத்தில் சிறுத்தை தாக்குதலில் ஒரு சிறுமி இறந்தார். அதற்கு முன்பு, மற்றொரு குழந்தை படுகாயமடைந்தது. எனவே, நடைபாதையில் குழந்தைகளின் அனுமதி குறித்து சிறப்பு அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகிறது. வனப்பகுதியையொட்டி பொருத்தப்பட்ட கேமராக்கள் மூலம் சிறுத்தைகளின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. இதற்கிடையில், சிறுத்தையின் நடமாட்டம் அடிப்படையில் அதை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை ஊழியர்கள் முயற்சி செய்து வருகின்றனர். அதற்கு முன்னதாக, பக்தர்கள் எந்த பிரச்னையையும் சந்திக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
மீண்டும் ‘பாஸ்டேக்’ கொண்டு வர கோரிக்கை;
திருப்பதியில் இருந்து திருமலை செல்லும் வாகனங்களுக்கு அலிபிரி டோல்கேட்டில் ‘பாஸ்டேக்’ மூலம் சுங்கக்கட்டணம் பெறப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 1 வாரமாக ‘பாஸ்டேக்’ மூலம் பணம் எடுக்கப்படுவதில்லை. அதற்கு மாறாக ‘கூகுள் பே, போன் பே’ மூலமாக பணம் செலுத்தும்படி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் வாகனங்கள் நீண்டநேரம் வரிசையில் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. நேரமும் விரயமாகிறது. எனவே மீண்டும் ‘பாஸ்டேக்’ மூலம் வாகன கட்டணம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை; நடைபாதை இரவு 9.30 மணிக்கு மூடல்: பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் appeared first on Dinakaran.