இந்நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் என்.கே.சிங் ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஈஷா யோகா மையம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ‘ஈஷா யோகா மையம் தான் இந்தியாவிலேயே சிறந்த யோகா மையமாகும். மொத்த கட்டுமானங்களில் 80 சதவீதம் பசுமையாக நிர்வகித்து வருகிறது. தேவைப்பட்டால் அதற்கான ஆதாரங்களை கூட சமர்ப்பிக்கிறோம்’ என்று தெரிவித்தார். தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ‘சுமார் 1.25 லட்சம் சதுர மீட்டர் அளவில் அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டியுள்ளனர். ஈஷா யோகா மையம் கல்வி நிறுவனம் அல்ல. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வழங்கிய நோட்டீஸ் மீது நடவடிக்கை மேற்கொள்ள எங்களுக்கு அனுமதிக்க வேண்டும். மேலும் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கும் தடை விதிக்க வேண்டும். இந்த வழக்கை சிவராத்திரி விடுமுறைக்கு பிறகு பட்டியலிட வேண்டும்’ என்று தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், ‘உங்கள் கண்முன்னாகத்தான் ஈஷா யோகா மையம் கட்டப்பட்டது. இப்பொழுது அந்தக் கட்டுமானம் முழுமையாக முடிந்து விட்டது. ஆனால் தற்போது அது ஆபத்து விளைவிக்கக் கூடியது என சொல்கிறீர்கள். அதை நாங்கள் எப்படி ஏற்பது. பசுமைப் பகுதி குறைவாக இருக்கிறது அல்லது வேறு ஏதேனும் பிரச்னை என்றால் அதை சரி செய்ய பாருங்கள். உங்கள் கண் முன்பாகவே கட்டி எழுப்பப்பட்ட கட்டிடத்தை திடீரென நீங்கள் இடிக்க கேட்பதால் அதை அனுமதிக்க முடியாது. மேலும் ஈஷா யோகா மையம் எப்படி கல்வி நிலையம் இல்லை என்று கூறுவதையும் ஏற்க முடியாது. இருப்பினும் ஈஷா யோகா அதற்கான வரம்புகளை அவர்கள் சரிவர பின்பற்றவில்லை என்றால், தமிழ்நாடு அரசு தாராளமாக நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அதற்கான உரிய ஆதாரங்களை அவர்கள் வழங்க வேண்டும். இருப்பினும் அந்த கட்டிடத்தை இடிப்பதை ஏற்க முடியாது’ என தெரிவித்த நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.
The post கோவை ஈஷா யோகா மையம் வரம்புகளை பின்பற்றவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கலாம்: தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி appeared first on Dinakaran.