தொழுநோய் முகாம் குறித்து ஒருங்கிணைப்பு குழு கூட்டம்: கலெக்டர் பங்கேற்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், ஸ்பார்ஸ் தொழுநோய் விழிப்புணர்வு முகாமை சிறப்பாக நடத்துவது தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று நடந்தது. மருத்துவ பணிகள் தொழுநோய் பிரிவு துணை இயக்குநர் கனிமொழி, மாவட்ட சுகாதார அலுவலர்கள் பிரியாராஜ், பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கு, கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கி பேசுகையில், மகாத்மா காந்தியின் நினைவு நாளான ஜனவரி 30 ஒவ்வொரு ஆண்டும் உலகத் தொழுநோய் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

அதனடிப்படையில், திருவள்ளூர் மாவட்டத்திலும் ஜனவரி 30 முதல் பிப்ரவரி 13 வரை ஸ்பார்ஸ் தொழுநோய் விழிப்புணர்வு இருவார கால முகாம் நடத்தப்படும். அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் 5 ஒன்றியங்களில் தீவிர தொழுநோய் கண்டுபிடிப்பு முகாம் நடைபெறவுள்ளது. அந்த வகையில், சுகாதாரத் துறையை சேர்ந்த களப்பணியாளர்கள் மற்றும் தன்னாவலர்கள் வீடுவீடாகச் சென்று தொழுநோய் கண்டுபிடிப்பு பணி மேற்கொள்ள உள்ளனர்.

இதில் பள்ளி மாணவ – மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவருக்கும் தொழுநோய் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி இயக்குநர் விக்னேஷ்வரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சீனிவாசன் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள், மருத்துவமல்லா மேற்பார்வையாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், இயன்முறை பயிற்சி நுட்புநர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post தொழுநோய் முகாம் குறித்து ஒருங்கிணைப்பு குழு கூட்டம்: கலெக்டர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Related Stories: