இந்த ஊரைச் சுற்றி அமணம்பாக்கம், வெங்கல், மாகரல், புன்னப்பாக்கம் பாகல்மேடு, செம்பேடு, கொமக்கன்பேடு, சேத்துப்பாக்கம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தாமரைப்பாக்கம் கூட்டுசாலைக்கு வந்து, அங்கிருந்து சென்னை, திருவள்ளூர், செங்குன்றம், ஆவடி, அம்பத்தூர், கும்மிடிபூண்டி, பொன்னேரி போன்ற பகுதிகளுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கும், வேலைக்கும் செல்வார்கள்.
இதற்காக, இப்பகுதி மக்கள் விழுப்புரம் கோட்ட பஸ்களிலும், மாநகர பஸ்களிலும் செல்வார்கள். ஆனால், விழுப்புரம் கோட்ட பஸ்கள் போதிய அளவு இல்லை. ஆவடி, திருவள்ளூர், செங்குன்றம் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் மாநகர பஸ்களும் போதிய அளவு இல்லை. இதனால் தாமரைப்பாக்கம் கூட்டுசாலையில் மாநகர பஸ் பணிமனை மற்றும் பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
அதன்பேரில், அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, தாமரைப்பாக்கம் அருகில் அமணம்பாக்கம் கிராமத்தில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகில் உள்ள இடத்தில் மாநகர பஸ் பணிமனை மற்றும் மாநகர பஸ் நிலையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்பேரில், போக்குவரத்து துறை அதிகாரிகள், அந்த இடத்தை ஆய்வு செய்து ஐந்தரை ஏக்கர் இடம் ஒதுக்கீடு செய்து பெயர்ப் பலகை வைத்துவிட்டுச் சென்றனர். அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால், பஸ் பணிமனை வேலையை இதுவரை தொடங்கவில்லை. விரைவில் பணிகள் தொடங்குமா? என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: அமணம்பாக்கத்தில் மாநகர போக்குவரத்து பணிமனையும், பேருந்து நிலையமும் அமைக்கப்படும் என முதல்வராக இருந்த ஜெயலலிதா சட்டப்சபையில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டார். பின்னர் இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால், அதற்கான பணிகள் இன்னும் தொடங்கவில்லை.
எனவே, மாநகர பஸ் பணிமனை வேலையை விரைவில் தொடங்க வேண்டும். இல்லாவிட்டால் மாபெறும் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு கூறினர். வியாபாரிகள் சங்கத்தினர் கூறியதாவது: தாமரைப்பாக்கம் பகுதியில் மாநகர பஸ் பணிமனையும், பஸ் நிலையமும் அமைந்தால் வியாபாரிகளான எங்களுக்கு எங்கள் வர்த்தக நிறுவனங்களுக்குத் தேவையான பொருட்களை நேரடியாக பாரிமுனைக்குச் சென்று வாங்கி வர வசதியாக இருக்கும்.
இல்லாவிட்டால் தாமரைப்பாக்கத்தில் இருந்து செங்குன்றம் அல்லது மாதவரம் சென்று, பின்னர் பாரிமுனை பகுதிகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது. எனவே, கிடப்பில் கிடக்கும் மாநகர பஸ் பணிமனை மற்றும் பஸ் நிலைய பணிகளை விரைந்து முடித்தால் எங்களுக்கு ஏதுவாக இருக்கும். மேலும் பஸ் பணிமனை வேலையை விரைந்து முடிக்க வலியுறுத்தி கடை அடைப்பு போராட்டம், ஆர்ப்பாட்டம் என பல்வேறு போராட்டங்கள் செய்துள்ளோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, பணிமனை வேலையை விரைந்து தொடங்க வேண்டும். இவ்வாறு கூறினர்.
The post பெரியபாளையம் அடுத்த அமணம்பாக்கத்தில் கிடப்பில் போடப்பட்ட மாநகர பஸ் பணிமனை, பேருந்துநிலைய பணிகள்: இடம், நிதி ஒதுக்கப்பட்டும் தாமதம், விரைவில் தொடங்க கோரிக்கை appeared first on Dinakaran.