இ-சேவை மையம் நடத்தி வந்த வாலிபர் வெட்டிக்கொலை

திருவண்ணாமலை: இ-சேவை மையம் நடத்தி வந்த வாலிபரை அதிகாலையில் வீடு புகுந்து மர்ம கும்பல் கொடூரமாக வெட்டிக்கொலை செய்தது. திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த சிறுநாத்தூர் மதுரா சாலையூர் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன், விவசாயி. இவர் ஏரி அருகே உள்ள தனது விவசாய நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகிறார். இவரது மகன் கார்த்திகேயன்(33). இவர் சிறுநாத்தூர் பஸ் நிறுத்தம் அருகே இ-சேவை மையம் நடத்தி வருகிறார். மேலும் ரியல் எஸ்ேடட் தொழிலும் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கார்த்திகேயன் நேற்றிரவு இ-சேவை மையத்ைத பூட்டிவிட்டு வீட்டிற்கு வந்தார். வழக்கம்போல் இரவில் முன்பக்க கதவுக்கு பின்னால் படுத்து தூங்கினார். அவரது பெற்றோர், தனித்தனி இடங்களில் படுத்து தூங்கினர். கார்த்திகேயனின் தாத்தா கோபால்(90) என்பவர் கார்த்திகேயனின் அருகே படுத்திருந்தார்.இந்நிலையில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் மர்ம கும்பல் வீட்டிற்குள் புகுந்துள்ளது. அவர்கள், கார்த்திகேயனை கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க கார்த்திகேயன் முயன்றும் முடியவில்லை. அதற்குள் மூளை சிதறி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே கார்த்திகேயன் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். அப்போது பக்கத்தில் படுத்திருந்த தாத்தா கோபால் சத்தம் கேட்டு எழுந்தார். அவரை அந்த மர்ம கும்பல் கீழே தள்ளியுள்ளது.

இதில் நிலை தடுமாறி விழுந்த அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து மர்ம கும்பல் தப்பியோடிவிட்டது. இதற்கிடையில் சத்தம் கேட்டு எழுந்த அவரது பெற்றோர், மகன் சடலமாக கிடப்பதை பார்த்து கதறி அழுதனர்.இதுகுறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கார்த்திகேயனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயன் கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார்? ஏதேனும் முன்விரோதம் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post இ-சேவை மையம் நடத்தி வந்த வாலிபர் வெட்டிக்கொலை appeared first on Dinakaran.

Related Stories: