பூந்தமல்லி அருகே பரபரப்பு சிறுமியை கடித்து குதறிய ரேட் வில்லர் நாய்

பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே ரேட் வில்லர் நாய் சிறுமியை கடித்து குதறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியில் பெற்றோருடன் வசித்து வரும் 8 வயது சிறுமி நேற்று முன்தினம் இரவு டியூஷன் முடித்துவிட்டு வீட்டிற்கு தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அதே பகுதியில் உள்ள வீட்டில் வளர்த்து வரும் ரேட் வில்லர் நாய் வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்து நடந்து சென்று கொண்டிருந்த சிறுமியின் காலில் கடித்து குதறியது. இதனால், அந்த சிறுமி வலியால் துடித்து அலறினார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அந்த சிறுமியை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர்.

அங்கு அந்த சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் பூந்தமல்லி போலீசில் புகார் அளித்தனர். விசாரணையில், சிறுமி நடந்து சென்று கொண்டிருந்தபோது வீட்டில் இருந்தவர்கள் இரும்பு கதவை திடீரென திறந்தபோது, வெளியே சாலையில் ஓடி வந்த நாய் சிறுமியை கடித்து குதறியது தெரியவந்தது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post பூந்தமல்லி அருகே பரபரப்பு சிறுமியை கடித்து குதறிய ரேட் வில்லர் நாய் appeared first on Dinakaran.

Related Stories: