தொடர் குற்றங்களில் ஈடுபடுவோரின் ஜாமீனை ரத்து செய்ய நடவடிக்கை: மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் டிஜிபிக்கு கடிதம்

சென்னை: தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா எழுதிய கடிதத்தில், ஓரே நபர் பல குற்ற வழக்குகளில் ஈடுபடும்போது அந்த வழக்குகளில் சிறப்பு கவனம் செலுத்தி குறிப்பிட்ட காலவரையறைக்குள் அந்த வழக்குகளில் புலன் விசாரணை செய்து இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து வழக்கு விசாரணையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

அக்குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத் தந்தால் அந்த நபர் தொடர் குற்றங்களில் ஈடுபடுவதை முற்றிலும் தவிர்க்க முடியும். இக்குற்றவாளிகள் ஏதேனும் வழக்குகளில் ஜாமீன் பெற்று மீண்டும் குற்றச்செயலில் ஈடுபட்டால் அவர்களது ஜாமீனை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்றம் பிறப்பிக்கும் பிடிவாராண்ட் குறித்த விபரங்களை குற்றம் மற்றும் குற்றவியல் கண்காணிப்பு (கிரைம் அண்ட் கிரிமினல் டிராபிக்கிங் நெட்வொர்க்) தளத்தில் பதிவிறக்கம் செய்து குற்றஞ்சாட்டப்பட்டவர்களை கைது செய்து பிடிவாரண்டுகளை அமல்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

புலன் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றங்களில் உரிய நேரத்தில் சாட்சியம் அளிக்காததால் 4000க்கும் மேலான வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது குறித்த விபரங்களையும் குற்றம் மற்றும் குற்றவியல் கண்காணிப்பு தளத்தில் பதிவிறக்கம் செய்து சம்பந்தப்பட்ட காவல் ஆணையர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இவ்வழக்குகள் குறித்து ஆய்வு செய்து விசாரணை அதிகாரிகள் சாட்சியம் அளித்து இவ்வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். விசாரணை அதிகாரிகள் மாறுதலில் வேறு இடத்தில் பணியில் இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று சாட்சியம் அளித்து விசாரணையை முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுளளார்.

The post தொடர் குற்றங்களில் ஈடுபடுவோரின் ஜாமீனை ரத்து செய்ய நடவடிக்கை: மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் டிஜிபிக்கு கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: