ரூ.19.92 கோடியில் அமைக்கப்பட்ட உயர் மட்ட மேம்பாலம் எம்எல்ஏ தலைமையில் முதல்வருக்கு நன்றி தெரிவித்த பொதுமக்கள்

*நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதால் நெகிழ்ச்சி

கலசப்பாக்கம் : கலசப்பாக்கம் ஒன்றியத்தில் பெரும்பாலான கிராமங்கள் செய்யாற்றின் கரையோரங்களில் அமைந்துள்ளது. செய்யாற்றில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடும்போது, விவசாயிகள் விளை பொருட்களை கொண்டு செல்லவும், மாணவர்கள் பள்ளிக்கு செல்வதற்கும், பொதுமக்கள் பல்வேறு கிராமங்களுக்கு செல்ல அவதிப்பட்டு வந்தனர்.

கடந்த சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது அமைச்சர் எ.வ.வேலு, திமுக ஆட்சிக்கு வந்தவுடன், பழங்கோயில்- பூண்டி கிராமங்களை இணைக்கும் விதத்தில், உயர் மட்ட பாலம் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

தொடர்ந்து எம்பி சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன் ஆகியோர் தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலுவிடம் வலியுறுத்தியதின் பேரில், ரூ.19.92 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உயர்மட்ட பாலம் கட்டும் பணி முடிவடைந்தது.

இதைத்தொடர்ந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கடந்த மாதம் 11ம் தேதி அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார். நூற்றாண்டு கால கனவு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில், நிறைவேறியதால் நேற்று எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் தலைமையில், கிராம மக்கள் ஒன்று கூடி பாலத்தின் மீது நின்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், அமைச்சர் எ.வ.வேலுவிற்கும் நன்றி தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.

நிகழ்ச்சியில் ஒன்றிய திமுக செயலாளர்கள் சிவக்குமார், சுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினர் அன்பரசி ராஜசேகரன், நகர செயலாளர் சவுந்தர்ராஜன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Related Stories: