அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் மத்திய தொழிற்பாதுகாப்பு படை பயிற்சி மையம் உள்ளது. இந்த பயிற்சி மையத்தில் கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா பகுதியை சேர்ந்த சுனில்குமார் (48) என்பவர் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். இவர் தனது மனைவி, 2 மகன்களுடன் இங்குள்ள குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில், குடும்ப பிரச்னை காரணமாக சுனில்குமாரின் மனைவி, கணவரிடம் கோபித்துக் கொண்டு கர்நாடகாவில் உள்ள தாய் வீட்டிற்கு சமீபத்தில் சென்று விட்டதாக கூறப்படுகிறது. வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவு தனது இளையமகனுடன் சுனில்குமார் வீட்டில் படுத்து தூங்கினாராம். இந்நிலையில் நேற்று அதிகாலை அவரது மகன் எழுந்து பார்த்த போது தனது தந்தை தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அலறி கூச்சலிட்டார். தகவலறிந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post இன்ஸ்பெக்டர் தற்கொலை appeared first on Dinakaran.