துறை செயலாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் வளர்ந்த நாடுகளின் செயல்பாடுகளுக்கு இணையாக தமிழகம் அடைய வேண்டிய இலக்கை நிர்ணயிக்க வேண்டும்: ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

சென்னை: அனைத்து துறை செயலாளர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும், நமது எண்ணங்கள் புதிய அறிவிப்புகளாக மலரட்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஐஏஎஸ் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று சென்னை, தலைமை செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள கூட்ட அரங்கில் அனைத்துத் துறை அரசு செயலாளர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தலைமை செயலாளர் இறையன்பு தொடக்க உரை நிகழ்த்தினார். கூட்டத்தின் இறுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: செப்டம்பர் 16ம் தேதி அனைத்து துறை செயலாளர்களுடனும் எனது முதல் ஆய்வு கூட்டத்தை நடத்தினேன். அதுவரை செய்யப்பட்ட அறிவிப்புகளுக்கு விரைவில் அரசாணை வெளியிட கேட்டுக் கொண்டேன். இந்த தொடர் கண்காணிப்பின் வாயிலாக இதுவரை வெளியிடப்பட்ட 1,641 அறிவிப்புகளில் 1,313 அறிவிப்புகள், அதாவது 80 சதவீத அறிவிப்புகளுக்கு உரிய ஆணைகள் நேற்று முன்தினம் வரை சம்பந்தப்பட்ட துறைகளால் வெளியிடப்பட்டுள்ளன. மீதமுள்ள அறிவிப்புகளுக்கு உரிய ஆணைகள், நீங்கள் வெளியிட்ட ஆணைகள் அனைத்தும் செயல்பாட்டில் வந்துள்ளனவா என தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய அவசியம் உங்களுக்கு இருக்கிறது. ஆணைகள் வெளியிடப்பட்ட பணிகளுக்கான நிதி உரிய காலத்தில் விடுவிக்கப்பட்டு பணிகள் துரிதமாக நடைபெறுவதை இனி நீங்கள் நேரடியாக கண்காணிக்க வேண்டும். அரசு செயலாளர்கள் குறைந்தபட்சம் மாதம் 2 முறை மாவட்டங்களுக்கு சென்று பல்வேறு நலத் திட்டங்களின் செயல்பாட்டினை அறிந்து, உரிய தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். * வரும் ஆண்டிற்கான திட்டங்களை இப்போதே திட்டமிடுவதற்கான முன்னெடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். * ஒன்றிய அரசிடம் நிலுவையில் உள்ள 20 அறிவிப்புகளில் ஒன்றிய அரசின் சம்பந்தப்பட்ட துறைகளோடு தொடர்ந்து தொடர்பு கொண்டு உரிய முறையில் வலியுறுத்தி தேவைப்பட்ட நிதி ஒதுக்கீடுகளையும், ஒப்புதல்களையும் பெற ஆவன செய்ய வேண்டும்.* உங்களுக்கு நீங்களே ஒரு செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும். * இந்த ஆண்டுக்கான திட்டங்கள், அடுத்த 4 ஆண்டுக்கான திட்டங்கள், 2030 வரையிலான திட்டங்கள் என திட்டமிட வேண்டும். இத்தகைய செயல்திட்டம் ஒன்றை உருவாக்கிட வேண்டும். நமது சிந்தனைகளும், கனவுகளும், குறிக்கோள்களும் பெரிதாக இருந்தால்தான் நமது சாதனைகளும் பெரிதாக இருக்கும் என்பதை நாம் எப்போதும் நினைவில்கொள்ள வேண்டும். வளர்ந்த நாடுகள் மற்றும் தெற்காசிய நாடுகளின் செயல்பாடுகளுக்கு இணையாக நம்முடைய இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும். நம்முடைய இலக்குகள் அனைத்தும் திட்டம் அடிப்படையில் மட்டுமே இல்லாமல், நாம் அடைய வேண்டிய நோக்கத்தினை சென்றடையும் வகையில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். நீர் வளங்களை மேம்படுத்துவதற்கும், வேளாண் உற்பத்தியை பெருக்குவதற்கும், கல்வி தரத்தினை உயர்த்துவதற்கும், சுகாதார குறியீடுகளை மேம்படுத்துவதற்கும், அனைவருக்கும் வீடு என்கிற இலக்கினை அடைவதற்கும், தொழில் துறையில் உயரிய வளர்ச்சியினை எய்துவதற்கும், நம்முடைய இளைய சமுதாயத்தினரின் திறனை மேம்படுத்துவதற்கும், வறுமையை ஒழிப்பதற்கும், சுற்றுச்சூழலை சமநிலைப்படுத்துவதற்கும், தொடர்புடைய துறைகள் அனைத்தும் ஒருங்கிணைந்து ஒரு கூட்டு முயற்சியுடன் செயல்பட வேண்டும். அறிவித்தவை செயல்களாக ஆகட்டும். நமது எண்ணங்கள் புதிய அறிவிப்புகளாக மலரட்டும். மக்களுக்கான அரசு இயந்திரமாக எந்நாளும் செயல்படட்டும்.இவ்வாறு அவர் பேசினார்.* நாள்தோறும் ஆய்வு செய்கிறேன்அனைத்து துறைகளின் திட்டங்களை செயல்படுத்துவது குறித்த தகவல்களை நான் தெரிந்துகொள்வது தொடர்பாக தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் முதலமைச்சரின் தகவல் பலகை ஒன்றை ஏற்படுத்தி அதன்மூலம் தகவல்களை கொண்டு, நான் நாள்தோறும் ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். இந்த தகவல் பலகையில் இந்த அரசு வெளியிட்டு வரக்கூடிய அனைத்து அறிவிப்புகள், அரசின் முக்கிய திட்டங்கள் தொடர்பான அனைத்துத் தரவுகளும் இடம்பெற்றுள்ளன. அதில் உங்களது தகவல்களை உடனுக்குடன் பதிவேற்றம் செய்யுங்கள். அறிவிப்புகளின் செயலாக்கம் குறித்து அடுத்த மாதம் ஆய்வு செய்ய இருக்கிறேன். அதற்குள் விடுபட்ட திட்டங்களுக்கு செயல்வடிவம் கொடுங்கள். புதிய திட்டங்களை கொண்டு வாருங்கள் என்று முதல்வர் கூறினார்….

The post துறை செயலாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் வளர்ந்த நாடுகளின் செயல்பாடுகளுக்கு இணையாக தமிழகம் அடைய வேண்டிய இலக்கை நிர்ணயிக்க வேண்டும்: ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை appeared first on Dinakaran.

Related Stories: